தேசியக் கொடி குத்திக் கொண்டு ஓடி ஒளியும் எஸ்.வி.சேகர்... இவ்ளோதான் தேசபக்தி... ஷாநவாஸ் நறுக்
தேசியக் கொடி குத்திக் கொண்டு கைது நடவடிக்கைக்கு பயந்து எஸ்வி. சேகர் ஓடி ஒளிவது குறித்து ஷாநவாஸ் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை: தேசியக் கொடி குத்திக் கொண்டு கைது நடவடிக்கைக்கு பயந்து எஸ்வி சேகர் ஓடி ஒளிவதுதான் தேசபக்தி என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜ்பவனில் கடந்த மாதம் நிர்மலா தேவி விவகாரம் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அங்கு கேள்வி கேட்ட பெண் நிருபரின் கன்னத்தில் ஆளுநர் தட்டியது சர்ச்சையை கிளப்பியது.
மோசமான வார்த்தைகள்
இதற்கு ஆளுநர் மன்னிப்புக் கேட்ட போதிலும் அவர் கன்னத்தை தட்டியதற்கான காரணத்தை ஏற்க முடியாது என்று அந்த பெண் நிருபர் தெரிவித்திருந்தார். இதையடுத்து பெண் நிருபர்களை மோசமான வார்த்தைகளை குறிக்கும் வகையிலான பேஸ்புக் பதிவை எஸ்வி சேகர் வெளியிட்டிருந்தார்.
முன்ஜாமீன்
இதற்கு பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவரை கைது செய்யவும் கோரிக்கை எழுந்தது. பின்னர் முன்ஜாமீன் கேட்டு எஸ்வி சேகர் தாக்கல் செய்தார். அவரை கைது செய்ய தடை விதிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
தலைமறைவு
இதையடுத்து அவரை போலீஸார் இதுவரை கைது செய்யவில்லை. எஸ்வி. சேகர் கைது நடவடிக்கைக்கு பயந்து கொண்டு தலைமறைவாக உள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஷாநவாஸ் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
|
தேசபக்தி
அதில் கோவன், திருமுருகன் காந்தி, வளர்மதி, மன்சூர் அலிகான் இவர்கள் யாருமே சட்டையில் தேசியக் கொடியை குத்திக் கொண்டு அலையவில்லை. பொய்வழக்கு என்றாலும் கூட சட்டத்தை மதித்து சிறை சென்றார்கள். ஆனால், தேசியக் கொடியை குத்திக் கொண்டே சட்டத்தை மதிக்காமல் ஓடி ஒளிகிறார் SVசேகர். இவ்ளோதான் தேசபக்தி! என்று பதிவிட்டுள்ளார் ஷாநவாஸ்.