Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Exclusive: சீமானின் சாவுக்கு காத்திருக்கிறேனா? உளவுத்துறை ஏஜெண்ட்டா? சாட்டை துரைமுருகன் பரபர பேட்டி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பான வீடியோ- ஆடியோக்கள் மூலம் அவரை தாம் மிரட்டுவதாக அவதூறு பரப்புகின்றனர்; அதேபோல தமிழ்நாடு அரசின் உளவுத்துறை கையாள் எனவும் வன்மத்தை கக்குகின்றனர் என நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.

நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளத்துக்கு சாட்டை துரைமுருகன் அளித்த விரிவான பேட்டி: சாட்டை யூ டியூப் சேனலுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் தொடர்பு இல்லை என சீமான் அறிவித்திருந்ததன் மூலம் எனக்கான ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரத்தை தந்துள்ளதாகவே பார்க்கிறேன். அரசியல் பின்புலமே இல்லாத என்னை அங்கீகரித்து இன்றைய மாநில கொள்கை பரப்புச் செயலாளர் வரை சீமான் உயர்த்திய போது எப்படி மகிழ்ச்சி அடைந்தேனோ அதேபோல, தற்போதைய சீமானின் அறிக்கையையும் நான் ஏற்க வேண்டும்.

sattai

3-வது முறையாக நீக்கப்பட்டாலும்...

நாம் தமிழர் கட்சியில் இருந்து மீண்டும் (3-வது முறையாக) நீக்கப்பட்டாலும் நாம் தமிழர் கட்சிக்கும் சீமானுக்கும் தமிழ்த் தேசியத்துக்கும் ஏதோ ஒரு மூலையில் வேலைபார்த்துக் கொண்டுதான் இருப்பேன். நான் ஏற்கனவே 2 முறை நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன். ஆனாலும் நாம் தமிழர் கட்சியை விட்டு நான் விலகவில்லை. நான், நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட காலத்தில்தான் என் மீது 11 வழக்குகள் போடப்பட்டன. நான் சிறைக்கு போகும்போது, நாம் தமிழர் கட்சியில் இல்லை; ஒரு யூடியூபராகத்தான் ஊடகங்களால் பதிவு செய்யப்பட்டேன். குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் இருந்த போதும், 11 மாதங்கள் சிறையில் இருந்த போதும் வெளியே வரும் போதும் நாம் தமிழர் கட்சிக்காரனாகவே இருந்தேன். நான் சிறையில் இருந்த போது, நாம் தமிழர் கட்சியை விட்டு வெளியே வந்தால் வழக்குகளை எல்லாம் முடித்துவிடுகிறோம் என்றெல்லாம் கூட வழக்கறிஞர்கள் மூலம் பேசினார்கள்; திமுகவை எதிர்த்து கூட பேசட்டும்; ஆனால் நாம் தமிழர் கட்சியில் இருக்க வேண்டாம் என்கிற வாய்ப்புகளும் எனக்கு தரப்பட்டன. அப்படி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இருந்தால் நான் எங்கேயோ போய் சேர்ந்திருப்பேன்.

அமமுகவுடன் பேச்சுவார்த்தை நடந்ததா?

அமமுகவில் நான் இணைவதற்காக பேசப்பட்டதில் உண்மை இல்லை. அமமுகவுக்கும் எனக்கும் என்ன தொடர்பு? இது எல்லாம் யூகமாக சொல்லப்பட்டவைதான். 6 மாதம் சிறையில் நான் இருந்த போது வழக்கறிஞர் சேவியர் பெலிக்ஸிடம் ஏன் சீமான் என்னை வந்து பார்க்கவில்லை என கேட்டது உண்மைதான். அப்படி சீமான் என்னை வந்து பார்த்திருந்தால், சிறைக்குள் எனக்கு சிறு சிறு உதவிகள் கிடைத்திருக்கும்; ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நான் குண்டர் சட்டத்தின் கீழ் இருந்த போது வாழைப்பழம் கூட தர மறுத்தனர்; அரசியல் புத்தகங்களும் தர மறுத்தனர். 6 மாதம் கழித்து சீமான் சிறையில் என்னை வந்து பார்த்துவிட்டு போன பிறகு, சிறைக்குள் எனக்கிருந்த மரியாதையே வேற.. சீமானிடம், சாட்டை துரைமுருகனை சிறையில் போய் பார்த்தால் கூடுதல் வழக்குகள் போட்டுவிடுவர் என சிலர் சொல்லி இருந்தனர்; அதனால் சீமான் சிறைக்கு வந்து என்னை 6 மாதம் பார்க்காமல் இருந்தார்.

Seeman

சீமானை யாரும் இயக்க முடியாது

ராஜீவ் காந்தி, கல்யாண சுந்திரம், வெற்றிக்குமரன் உள்ளிட்டோர் நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதற்கு காரணம் என என்னை 'செல்வாக்கு'மிக்க நபராக கற்பனை செய்து கொள்கின்றனர். அப்படி சொல்வதன் மூலம் சீமானை மட்டுப்படுத்துவதாகவே பார்க்க வேண்டும். சீமானை எவர் ஒருவராலும் இயக்கவே முடியாது. சீமான் தமது முடிவை தாம் மட்டுமே எடுப்பார்.

சீமானை விமர்சித்ததே இல்லை

ராஜீவ் காந்தி தொடங்கி இன்றைக்கு வரை பலரும் நாம் தமிழர் கட்சியை விட்டு வெளியேறுவதற்கான காரணம்- மையப்புள்ளி ஜெகதீச பாண்டியன். சீமான் வசதியாக, சொகுசாக வாழ்கிறார் என அத்தனை பேரிடம் சொல்லி மண்டையை கழுவியவரே ஜெகதீச பாண்டியன்தான். அவருக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்தது. சீமானுக்கு பக்கத்தில் யார் நின்றாலும் அவர்களை பிடிக்காது. நான் கட்சியில் இருந்து 2 முறை நீக்கப்பட்ட போதும் பொதுவெளியில் விமர்சனத்தை வைத்ததே இல்லை.

என்னுடைய நல்லதுக்குதான்

சீமான் இப்போது என்னுடைய யூ டியூப் சேனலுக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை என அறிவித்ததும் கூட நான் நல்லா இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில்தான். அதாவது என்னுடைய சேனலை நானே சரி செய்து கொள்ள வேண்டும்; யாரும் சீமானிடம் புகார் சொல்லக் கூடாது என்கிற ஒரு வழிகாட்டுதலாகவே அதை நான் பார்க்கிறேன்.

சீமானின் சாவுக்கு காத்திருக்கிறேனா?

சீமானின் சாவை சாட்டை துரைமுருகன் எதிர்நோக்கி காத்திருக்கிறார் என பேசுவது எல்லாம் அயோக்கியத்தனத்தின் உச்சம். இத்தகைய பேச்சுகள் மலத்துக்கு சமமானவை; உடம்பு முழுவதும் விஷம் தலைக்கேறியவர்கள் பேசுகிற பேச்சு.. சீமானை உயிராய் நேசிக்கிற நாங்கள், சீமானை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்.

உதயநிதி vs விஜய் vs சாட்டை துரைமுருகன் என பேசியது உண்மையா?

பொதுவெளியில். சீமான் இன்னும் கொஞ்சநாள்தான்.. அதற்கு பிறகு உதயநிதி vs விஜய் vs சாட்டை துரைமுருகன் என்றுதான் களமிருக்கும் என நான் பேசுவதாக சொல்லப்படுவது உண்மை இல்லை; கற்பனையில் கூட இப்படி பேச முடிய்மா? ஒரு யூ டியூப் சேனலையே நடத்த முடியலை.. ஒரு அரசியல் கட்சியை நம்மால் நடத்திவிட முடியுமா? சீமான் கூட இருந்த யாரையும் யாரும் காலி செய்துவிட முடியாது. எல்லோரும் சாட்டை துரைமுருகனை குற்றம் சொல்வதற்கு காரணம், என்னுடைய ஊடக வெளிச்சம்தான். நான் மேடையில் பேசி கைதட்டு வாங்குவதை கூட சீமான் விரும்பவில்லை என வெற்றிக்குமரனே என்னிடம் சொன்னார்; இதை முதல் முறையாக ஒன் இந்தியாவிடம்தான் கூறுகிறேன்.

சீமான் அறிக்கை ஏன்?

கொள்கை பரப்புச் செயலாளர் பதவியில் இருந்து மாநில ஒருங்கிணைப்பாளராக நகர்வதற்காக அனைவரையும் வெளியேறச் செய்கிறேன் என்று சொல்கின்றனர். அதற்கான தேவை என்ன இருக்கிறது? தற்போது சீமான் அறிக்கை வெளியிட்டதற்கு முக்கிய காரணம் மதபோதகர் ஜெபராஜ் வழக்கு குறித்த வீடியோவுக்குதான். மற்றபடி வைகுண்டராஜன், நித்தியானந்தா, நயினார் நாகேந்திரன் போன்றோர் குறித்த வீடியோக்களுக்காக அல்ல.

sattain

சீமானின் வீடியோக்கள் மூலம் மிரட்டலா?

என்னுடைய 4 செல்போன்களை திருச்சி டிஐஜி வருண்குமார் இதுவரை கையில் எடுத்திருக்கிறார். அப்போது அதில் இருந்த ஆடியோக்களை எடுத்து திமுக ஐடிவிங் மூலமாக வெளியிடப்பட்டது. அப்படியான ஆடியோ, வீடியோக்களில் எதில் ஒன்றிலாவது சீமானின் தனிப்பட்ட குரல் பதிவுகள் ஏதாவது வெளியே வந்ததா? வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தியாக சீமான் எனக்கு ஆடியோக்கள்தான் வெளியிடப்பட்டன. அதில் தவறாக ஒன்றுமே இல்லை. இதுவரை வெளியான நாம் தமிழர் கட்சி- சீமான் தொடர்பான ஆடியோக்கள் அனைத்தும் என்னுடைய செல்போனில் இருந்து எடுக்கப்பட்டவை அல்ல. சில ஆடியோக்கள் வெட்டி ஒட்டப்பட்டவைதான். காளியம்மாள் தொடர்பான பிசிறு ஆடியோ என்னுடைய செல்போனில் இருந்தது கிடையாது. அப்படி சீமானின் ஆடியோ, வீடியோக்களை நான் பதிவு செய்து வைத்திருந்தால் திருச்சி எஸ்பி வருண்குமார் சும்மா விட்டு வைத்திருப்பாரா? அப்படி ஆடியோ, வீடியோவை சீமானை மிரட்டுவது என்பது அவரை அசிங்கப்படுத்துவதாகும்.

உளவுத்துறை ஏஜெண்ட்டா?

என்னை உளவுத்துறை கையாள் என கூறுகின்றனர். அதாவது திமுகவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறுகின்றனர். உளவுத்துறை என்னை கையில் எடுத்திருந்தால் நா சொகுசாக வாழலாமே.. என் மீதான வன்மத்தை நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் குறைத்து கொள்வது நல்லது. இவ்வாறு சாட்டை துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+