இனிதே முடிந்த ‘நம்ம ஊரு பரோட்டா சூரி யாரு?’ போட்டி... யாராலும் சூரியை வெல்ல முடியவில்லை!
நெல்லை: கல்லிடைக்குறிச்சி ஹோட்டலில் நடைபெற்ற 'நம்ம ஊரு பரோட்டா சூரி யாரு?' போட்டியில் விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த கோதர் மைதீன் என்பவர், 42 பரோட்டாக்களை சாப்பிட்டு பரிசை தட்டிச் சென்றுள்ளார்.
நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் இயங்கி வரும் தனியார் ஹோட்டல் ஒன்றில் கடந்த திங்களன்று 'நம்ம ஊரு பரோட்டா சூரி யாரு?' என்கிற தலைப்பில் பரோட்டா சாப்பிடும் போட்டி நடைபெற்றது.
வெண்ணிலா கபடிக்குழு படத்தில் சூரி பரோட்டா கடை ஒன்றில் நடைபெறும் போட்டியில் கலந்து கொண்டு கலகலக்க வைப்பார். சூரியை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடைக்காரர் கோல்மால் செய்வார். ஆனால், 50 பரோட்டாக்களைச் சாப்பிட்டு முடித்த சூரி, 'அசால்டாக கோட்டை எல்லாம் அழிங்க... நான் பர்ஸ்ட் இருந்து சாப்டுறேன்' எனக் கூறி எல்லாரையும் ஷாக் ஆக்குவார். அந்தக் காட்சி மூலம் பிரபலம் ஆனதாலேயே சூரியின் பெயரோடு பரோட்டா ஒட்டிக் கொண்டது எனலாம்.

வித்தியாசமான போட்டி...
இந்நிலையில், தற்போது சூரியின் இந்த காமெடியை தங்களது வியாபாரத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தனர் கல்லிடைக்குறிச்சியில் உள்ள நாச்சியார் அசைவ தர்பார் ஹோட்டல் நிர்வாகத்தார். எனவே, ‘நம்ம ஊரு பரோட்டா சூரி யாரு?' என்ற பெயரில் வித்தியாசமான சாப்பாட்டுப் போட்டி ஒன்றை அவர்கள் அறிவித்தனர். முதல்பரிசு ரூ. 5001 எனவும் அறிவிக்கப்பட்டது.

நிபந்தனைகள்...
மது குடித்தவர்கள் போட்டியில் பங்கேற்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டாலும், அக்கம்பக்கத்து ஊரில் இருந்து பல சாப்பாட்டு ராமன்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள முண்டியடித்தனர். இதனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போட்டியாளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.

முதல் பரிசு...
இறுதியில் மற்ற போட்டியாளர்களை விட அதிக பரோட்டாக்களைச் சாப்பிட்டு, விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த கோதர் மைதீன் என்பவர் ரூ. 5001 பரிசைத் தட்டிச் சென்றார். இவர் 42 பரோட்டாக்களைச் சாப்பிட்டிருந்தார்.

2வது இடம்...
இவருக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் வந்த நபர் 35 பரோட்டக்கள் சாப்பிட்டாராம். ஏற்கனவே தங்களது கடையை விளம்பரப்படுத்த இந்த ஹோட்டல் நிர்வாகத்தார் மேலும் பல வித்தியாசமான போட்டிகளை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications