மத்திய அரசு திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தரவில்லை- அமித்ஷா குற்றச்சாட்டு
திருச்சி: மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தரவில்லை என்று திருச்சியில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 84 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்த வேட்பாளர்களை திருச்சியில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா அறிமுகம் செய்து வைத்து உரையாற்றுகிறார்.
இதற்காக திருச்சி வந்த அமித்ஷா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் ஊழலில் திளைத்தவை. இந்த ஊழலால் தமிழகம் முன்னேற்றமடையாமல் முடங்கி போயுள்ளது.
மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தருவதில்லை. இதனால் மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது.
மத்திய அரசின் நடவடிக்கையால் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் 5 தமிழருக்கான மரண தண்டனையை மத்திய அரசுதான் தடுத்து நிறுத்தியது.
இவ்வாறு அமித்ஷா கூறினார்.
அமித்ஷாவின் வருகையையொட்டி பொதுக்கூட்டம் நடக்கும் தென்னூர் உழவர் சந்தை பகுதியில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.