உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாகவே அம்மா திரையரங்குகள்!- மாநகராட்சி தீவிரம்
சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாகவே அம்மா திரையரங்குகளைத் திறக்க சென்னை மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது.
இதற்காக 7 இடங்களைத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
குறைந்த கட்டணத்தில் மக்கள் திரைப்படம் பார்க்க அம்மா திரையரங்கம் அமைக்கப்படும் என கடந்த 2014 இல் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி அறிவித்தார். இதைத்தொடர்ந்து, சென்னை மாநகராட்சி இடம் தேர்வு செய்யும் பணியை மேற்கொண்டது. அதன்படி, ராமாவரம், புளியந்தோப்பு, பேசின்பாலம், பாடி, தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், மாநகராட்சி கட்டடமான ஷெனாய் நகர் அம்மா கலையரங்கம், சர் பிட்டி தியாகராயர் அரங்கம் ஆகியவற்றிலும் இதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மாநகராட்சி அலுவலகக் கட்டடங்களிலும் அம்மா திரையரங்குகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தேசிய சினிமா வளர்ச்சி கவுன்சிலுடன் ஆலோசனை செய்து வருகிறது சென்னை மாநகராட்சி.
இந்த இடங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே அம்மா திரையரங்குகளைத் திறப்பதில் சென்னை மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது.