அமைதியா குடிச்சிட்டு ஒரு ஓரமா போயிடுறோமுங்க.. மூடிடாதீங்க.. எம்எல்ஏவிடம் கெஞ்சிய 'மூத்த குடிமகன்'!
ஈரோடு அருகே ஊருக்குள் இருக்கும் மதுக்கடையை அகற்றக்கூடாது என ஒரு முதியவர் எம்எல்ஏவிடம் கெஞ்சிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு: முத்தாம்பாளையத்தில் உள்ள மதுக்கடையை அகற்றக் கூடாது என ஒரு முதியவர் எம்எல்ஏவிடம் கெஞ்சி மன்றாடினார். அவர் கூறியதைக் கேட்ட எம்எல்ஏ சிரித்தபடியே பார்க்கலாம் என கூறிச்சென்றார்.
ஈரோடு முத்தாம்பாளையம் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் ஈரோடு மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.வி. ராமலிங்கம் கலந்து கொண்டார்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் கூட்டாக எம்எல்ஏவை சந்தித்தனர். அப்போது தங்கள் பகுதியில் ஒரு மதுக்கடை உள்ளது. இதனால் எங்களால் நிம்மதியாக நட மாட முடியவில்லை. அந்த மதுக்கடையை உடனே அகற்ற வேண்டும்'' என்று கூறினர்.

ஓடி வந்த வந்த முதியவர்
இதற்கு பதிலளித்த எம்.எல்.ஏ. ராமலிங்கம, அதிகாரிகளிடம் கூறி கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க சொல்கிறேன் என உறுதியளித்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சங்கர் என்ற முதியவர் எம்எல்ஏவை நோக்கி ஓடி வந்தார்.

கெஞ்சி மன்றாடிய முதியவர்
இதையடுத்து எம்எல்ஏவை சந்தித்து பேசிய முதியவர் மதுக்கடையை அகற்றக் கூடாது என கெஞ்சி மன்றாடினார். எம்எல்ஏவிடம் அவர் பேசியதாவது, இந்த மதுக்கடையால் எந்த தொல்லையும் இல்லீங்க. இந்த பகுதியில் இருக்கும் ஒரே கடை இந்த கடைதானுங்க. இதையும் மூடிட்டா நாங்க எங்கே போவோம்?

ஒரு ஓரமா போயிடுறோமுங்க
இந்த கடையால் பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் கிடையாதுங்க. கடையும் ஒதுக்குப்புறத்தில் ஓரமா இருக்கு. நாங்க அமைதியாக வந்து குடிச்சிட்டு ஒரு ஓரமா போயிடுறோமுங்க.

நிம்மதியா குடிக்க விடுங்க
குடிக்கறவங்க எல்லாம் கெட்டவன் கிடையாது. குடிக்காதவன் எல்லாம் நல்லவனும் கிடையாதுங்க. எங்களை இந்த கடையில் நிம்மதியா குடிக்க விடுங்க.

தயவு செய்து எடுக்காதீங்க
இந்த கடையை விட்டால் ஈரோட்டுக்கு தான் போக வேண்டும். நாங்க யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டோமுங்க. தயவு செய்து இந்த கடையை எடுக்காதீங்க.

சிரித்தப்படியே சென்ற எம்எல்ஏ
இவ்வாறு அந்த முதியவர் கும்பிடுபோட்டபடியே கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். முதியவர் வேண்டுகோளை சிரித்தப்படியே கேட்டு கொண்ட ராமலிங்கம் எம்.எல்.ஏ. பார்க்கலாம் என்று கூறி அவரை அனுப்பி வைத்தார். மதுக்கடையை அகற்றக்கூடாது என முதியவர் மன்றாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications