செயல் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு... ஒரு திறந்த கடிதம்!
அரை நூற்றாண்டுகளாக அரசியலில் இருக்கும் உங்களுக்கு இப்படி ஒரு கடிதம் எழுத வேண்டிய சூழல் வந்திருக்கக் கூடாது. ஆனால் தன் தள்ளாத வயதிலும் தமிழக அரசியலில் ஆக்டிவாகவே இருந்து வந்த கலைஞரின் வாரிசு அவரது இடத்தில் பாதிகூட நிரப்ப முடியாமல் தத்தளிப்பதை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
இலங்கை இறுதிப்போர் உள்ளிட்ட சில விஷயங்களை தவிர தலைவரின் எல்லா முடிவுகளுமே மிகச்சரியாகத்தான் இருந்திருக்கின்றன. உங்களுக்கு தலைவர் பதவி வழங்காமல் இழுத்ததும் அந்த சரியான முடிவுகளில் ஒன்றுதான் என்பதை நிரூபிக்கும் விதத்தில் இருக்கிறது உங்களின் சமீப நடவடிக்கைகள்.
காலம், தோல்வி, வயது ஆகியவை ஒரு தலைவனுக்கு நல்ல பக்குவத்தைக் கொடுக்கும். ஆனால் தங்களிடம் அது இல்லையோ என்று தோன்றுகிறது. தன்னை ஆசையாக சந்திக்க வரும் தொண்டர்களிடம் எந்த நேரத்திலும் முகச் சுளிப்பை பரிசாகக் தந்ததில்லை தலைவர். ஆனால் நீங்களோ சிரிப்பதற்கே காசு கேட்பீர்கள் போல... ப்பேய்யா...என்று தொண்டர்களையும் நிர்வாகிகளையும் அலட்சியமாக பேசுவதை அப்பட்டமாக மிமிக்ரி செய்து சிரிக்கிறார்கள்.
உங்கள் தந்தையின் மேடைப் பேச்சையும் உங்கள் மேடைப் பேச்சையும் கவனியுங்கள். தந்தை எந்த அளவுக்கு வாசித்திருக்கிறார். நீங்கள் எந்த அளவுக்கு வாசித்திருக்கிறீர்கள் என்பது புரியும். எனக்குத் தெரிந்து எந்த மேடையிலும் தலைவர் தனது கைக்கடிகாரத்தைப் பார்த்ததாக நினைவில்லை. ஆனால் நீங்கள் கைக்கடிகாரத்தை பார்க்காத ஒரு மேடையைக் கூட எங்களால் நினைவுக்கு கொண்டுவர முடியவில்லை.
அன்பழகனோ துரைமுருகனோ இரண்டாம் கட்ட தலைவர்களோடு கலைஞருக்கு பிணக்கோ வாதமோ வராமல் இல்லை. பல முறை துரைமுருகன் தலைவரிடம் கோபித்துக்கொண்டு அறிவாலயத்தில் இருந்து சென்றிருக்கிறார். ஆனால் அது சில மணி நேரம்தான். கலைஞரே உதவியாளரிடம் 'துரைமுருகன் எங்கேய்யா...? வரச் சொல்லு' என்பார். 'தலைவரே மீண்டும் அழைத்துவிட்டாரே' என்று குழந்தை போல ஓடி வருவார் துரைமுருகன். ஆனால் தங்களுக்கு ஒருமுறை கோபம் வந்தால் அதோடு அவர்கள் கதை முடிந்தது. இப்படி கட்சிக்காரர்களை 'அரவணைத்தால்' கட்சி விளங்குமா?
எழுதி வைத்த பேப்பரில் உள்ளதை வாசிக்கவே தடுமாறும் காட்சியை பார்ப்பவர்களுக்கு 'கலைஞர் இருந்த இடத்தில் இவரா?' என்ற கேள்வி வந்து போகுமா இல்லையா? பேசுவதில் மட்டுமல்ல முடிவெடுப்பதிலும் ஏன் இத்தனை குழப்பம்? ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராடிய போது தாங்கள் நடத்திய ரயில் மறியல், உண்ணாவிரத காமெடிகள் எல்லாம் மக்களிடமும் தொண்டர்களிடமும் உங்களுக்கு கெட்ட பெயரைத்தான் கொடுத்தன.
சட்டசபையில் நடந்த சம்பவங்களிலும் அப்படித்தான். ஒரு நாடகத்தைக் கூட சரியாக அரங்கேற்ற முடியவில்லை. 'யார்க்கர் பந்துகளைக் கூட சிக்ஸர்களாக மாற்றுபவர் கலைஞர் என்றால், அவரது மகன் மகன் ஃப்ரீ ஹிட்களைக் கூட கோட்டை விடுகிறார்' என்று கிண்டலடிக்கிறார்கள். விவசாயிகள் மரணங்கள், ராம்குமார் தற்கொலை, ஜெயலலிதா மரணம் என எதையுமே சரியாகக் கையாளவில்லை திமுக.
சொந்த அண்ணனையும் தங்கையையும் கூட அரசியல் செய்ய விடாமல் தடுப்பது எது? பயம். தகுதியில்லாதவன்தான் தன் இடத்துக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பயப்படுவான். உங்களுக்கு தகுதி இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். நீங்கள்தான் நம்பவில்லை.
விஜயகாந்த் இரண்டாவது இடத்துக்கு வந்துவிடுவாரோ என்பதற்காக தனக்கு முதல் இடம் போனாலும் பரவாயில்லை என்று கடந்த தேர்தலில் கூட்டணி உருவாகாமல் பார்த்துக் கொண்டீர்கள். இதோ ஓபிஎஸ் உருவாகி விட்டார். என்ன செய்யப் போகிறீர்கள்? தொண்டர்கள் சந்திப்பு முதல் க்ளீன் இமேஜைப் பாதுகாப்பது, சாதுர்யமாக பேசுவது என்று உங்களையும் சேர்த்துதான் ஓவர்டேக் செய்துகொண்டிருக்கிறார் ஓபிஎஸ். நீங்கள் தொடங்கிய இடத்திலேயே நிற்கிறீர்கள்.
தளபதி என்ற பட்டத்துக்கு கட்சியில் பொருத்தமானவர் நீங்கள் தான். மிசா காலத்தில் இருந்தே கட்சிக்காக உழைத்தவர் நீங்கள். ஆனால் இப்போதைய அரசியலில் இதே நிலை தொடர்ந்தால் கருணாநிதி மகன் என்ற ஒரே காரணத்தால்தான் கட்சியைக் கைப்பற்றினீர்கள் என்று பேசுபவர்களுக்கு நாங்கள் பதில் சொல்ல முடியாத சூழல் உருவாகும். காரணம் உங்கள் தந்தையின் வார்த்தைகள்தான்.
'கட்சி ஒன்றும் சங்கரமடம் அல்ல...'
இப்படிக்கு
உண்மைத் தொண்டன்