தமிழக மீனவர்கள் மீது இலங்கைப் படை துப்பாக்கிச் சூடு.. அன்புமணி கடும் கண்டனம்
சென்னை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பதற்கு பாமக முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மீது சிங்களப் படையினர் ரப்பர் குண்டுகளைக் கொண்டு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன்பிடி வலைகள் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த மீன்பிடி கருவிகளின் மதிப்பு பல லட்ச ரூபாய்க்கும் மேல் இருக்கும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, 9 மீனவர்களையும் சிங்களப் படையினர் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு சொந்தமான 2 விசைப்படகுகளையும் சிங்களப்படை பறிமுதல் செய்துள்ளது. இலங்கைப் படையினரின் இந்த வெறித்தனமான தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகள் சர்ச்சைக்குரிய கச்சத்தீவு பகுதியில் நடந்துள்ளன. புதுக்கோட்டை மீனவர்கள் மீதான இத்தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.
சிங்களப் படையினரால் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 104 மீனவர்கள் கடந்த வாரம் தான் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 66 விசைப்படகுகளை ஒப்படைக்க இலங்கை அரசு மறுத்துவிட்டது. அதுமட்டுமின்றி, அந்த படகுகளை இலங்கை மீனவர்களுக்கு வழங்கப்போவதாகவும் அறிவித்திருக்கிறது.
104 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட நிம்மதியை அனுபவிப்பதற்குள்ளாகவே கடந்த சில நாட்களுக்கு முன்பாக 6 மீனவர்களை அவர்களுக்கு சொந்தமான 2 படகுகளுடன் சிங்களப் படை கைது செய்தது. இப்போது மேலும் 9 மீனவர்களையும், அவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.
தமிழக மீனவர்களை கைது செய்து படகுகளை பிடித்து வைத்துக் கொள்வதும், ரப்பர் குண்டுகளால் துப்பாக்கிச்சூடு நடத்தி படகுகள் மற்றும் மீன்பிடி கருவிகளை சேதப்படுத்துவதும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை திட்டமிட்டு அழிக்கும் செயலாகும். இத்தகைய அட்டூழியம் தொடர அனுமதித்தால் தமிழக மீனவர்கள் மீன்பிடித் தொழிலை கைவிடும் நிலை ஏற்படும்.
மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்; தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும்; மீனவர்களைத் தாக்க கூடாது என்று இலங்கை அரசுக்கு இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வரும் போதிலும், இதுபோன்ற அத்துமீறல்களில் இலங்கை ஈடுபடுவது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் ஆகும்.
எனவே, தமிழக மீனவர்கள் மீதான அத்துமீறலை மத்திய அரசு இனியும் அனுமதிக்கக்கூடாது. தமிழக மீனவர்களிடம் அத்துமீறினால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும். இலங்கை சிறையில் வாடும் 15 மீனவர்களையும், 70 மீன்பிடி படகுகளையும் உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளார் அன்புமணி.