சட்டசபை தேர்தலில் போட்டியிட பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி தயக்கம்?
சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? என்பதில் பாட்டாளி மக்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் குழப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாமக தனித்தே போட்டியிடுகிறது. அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் வரலாம் என பாமக அழைத்துப் பார்த்தும் எந்த கட்சியும் வரவில்லை.
பாஜகவும் பாமகவை வளைக்கப் பார்த்தது. ஆனாலும் எதுவும் நடக்காமல் போன நிலையில் தனித்தே களமிறங்கிவிட்டது பாமக. இதுவரை 2 கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் பாமக வெளியிட்டுள்ளது.
ஆட்சியை கைப்பற்ற முடியாது
இந்த நிலையில் லோக்சபா எம்.பி.யும் முதல்வர் வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? என்ற குழப்பத்தில் இருந்து வருகிறாராம்... பாமக என்னதான் தனித்து போட்டியிட்டாலும் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்பது அனைவரும் அறிந்த உண்மை.
உள்ளதும் போய்விடும்
சட்டசபை தேர்தலில் அன்புமணி போட்டியிட வேண்டுமானால் எம்.பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அப்படி ராஜினாமா செய்து தேர்தலில் போட்டியிட்டால் வென்றாக வேண்டிய நெருக்கடி அன்புமணிக்கு இருக்கிறது. ஒருவேளை அன்புமணி வெல்ல முடியாமல் போனால் எம்.பி. பதவியையும் இழந்து நிற்க வேண்டியதுதான்.
எதை ராஜினாமா செய்வார்?
அப்படி அன்புமணி வெற்றி பெற்றும் பாமக ஆட்சி அமைக்க முடியாமல் போனால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவே அவர் முன்வருவார். இது மக்களிடையே கடும் விமர்சனத்தை உருவாக்கும். அத்துடன் சட்டசபை தேர்தலிலேயே போட்டியிடாவிட்டால் ஒரு முதல்வர் வேட்பாளரே போட்டியிடாமல் ஓடிவிட்டார் என ஏகடியம் பேசப்படுகிற நிலை உருவாகும்.
இதுதான் காரணம்...
ஆகையால் தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? என்பதில் அன்புமணி பெரும் குழப்பத்தில் இருக்கிறார். இதனால்தான் பாமகவின் 2-கட்ட வேட்பாளர் பட்டியலிலும் அன்புமணி போட்டியிடும் தொகுதி அறிவிக்கப்படவில்ல என்கின்றன பாமக வட்டாரங்கள்.