ராத்திரியில் ரங்கசாமியை திடீரென சந்தித்த அன்புமணி ராமதாஸ்
புதுச்சேரி: புதுச்சேரிக்கு வந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ், அங்கு புதுவை முதல்வர் ரங்கசாமியை இரவில் சந்தித்துப் பேசினார்.
பாஜக கூட்டணியில் ரங்கசாமி கட்சியும் இணைந்துள்ளது. புதுச்சேரி தொகுதியில் ரங்கசாமி கட்சி போட்டியிடுகிறது. இப்போதைய நிமிடம் வரை பாஜகவுடன்தான் பாமகவும் பேசி வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் இந்த இரு கட்சிகளையும் சேர்ந்த தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி தொகுதியில் ஏற்கனவே பாமக தனது வேட்பாளரை அறிவித்துள்ளது. முன்னாள் எம்.எல்.ஏவும் புதுவை மாநில பாமக செயலாளருமான அனந்தராமன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்.
ஏற்கனவே பாமக வேட்பாளருக்கு ரங்கசாமி ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று பாமக கேட்டு வருகிறது. ஆனால், ரங்கசாமியின் என். ஆர். காங்கிரஸோ பாஜகவுடன் இணைந்து புதுவையில் போட்டியிடத் தீர்மானித்துள்ளது.
இந்த நிலையில்தான் நேற்று இரவு பத்தரை மணியளவில் புதுச்சேரிக்கு வந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ், ஹோட்டல் ஒன்றில் வைத்து ரங்கசாமியுடன் பேச்சு நடத்தினார்.
பேச்சுவார்த்தையில் என்ன பேசப்பட்டது என்பது தெரியவில்லை. சந்திப்புக்குப் பின்னர் இருவரும் தனித் தனியாக வந்து அவரவர் கார்களில் ஏறிப் போய் விட்டனர்.
இந்த திடீர் சந்திப்புக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஒரு வேளை பாஜகவை கழற்றி விட்டு இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது குறித்து அன்புமணி பேசினாரா என்று தெரியவில்லை.