இலவசங்களுக்கு கடன் வேண்டாம், அத்திக்கடவு திட்டத்திற்கு வாங்குங்கள்... அன்புமணி அட்வைஸ்!
அத்திக்கடவு அவிநாசி திட்டம் வாழ்வாதாரப் பிரச்னை என்பதால் அரசு உடனடியாக கடன் வாங்கியாவது தொடங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கோவை : அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை அரசு கடன் வாங்கியாவது நிறைவேற்றியே தீர வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:
அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறோம். காலை அத்திக்கடவு பகுதியில் தொடங்கி அன்னூர், அவிநாசி என்று மாலையில் பெருந்துறையில் பொதுக்கூட்டம் நடத்துகிறோம்.
கொங்கு மண்டல மக்களின் 55 ஆண்டுகால கனவுத்திட்டம். காமராஜர் காலத்தில் மாரப்ப கவுண்டர் அவர்களால் வலியுறுத்தி 62ல் அறிவிக்கப்பட்டது. ஆனால் திட்டம் இன்னும் கிடப்பில் உள்ளது. திமுக, அதிமுக மாறி மாறி உறுதி கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, தேர்தலுக்கு முன்பு உறுதியளிப்பார்கள் ஆனால் நிறைவேற்றமாட்டார்கள்.
55 ஆண்டுகால திட்டம்
காமராஜர் ஆட்சி காலத்திலேயே இந்த திட்டம் ரூ. 10 கோடி இது இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து 96ல் இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.137 கோடியானது. 2002ல் ரூ.280 கோடியாக இருந்த திட்ட மதிப்பீடு 2012ல் ஆயிரத்து 800 கோடியாக அதிகரித்துள்ளது. ஆனால் இன்று இந்த திட்டத்தின் மதிப்பு ரூ. 3 ஆயிரத்து 500 கோடி, ஆனாலும் இந்தப் பகுதியில் மிகப்பெரிய வறட்சி இருக்கிறது.
கட்டாயம் நிறைவேற்ற வேண்டும்
இது மேடான பகுதி. ஆயிரத்து 800 முதல் இரண்டாயிரம் அடிக்கு கீழ் நிலத்தடி நீர் சென்றுள்ளது. அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றினால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறும், 50 லட்சம் மக்கள் குடிநீர் வசதி பெற முடியும். 31 பொதுப்பணித்துறை ஏரிகள், 40 ஊராட்சி மன்ற குளங்கள் என 701 நீர்நிலைகளுக்கு தண்ணீர் சென்று நிலத்தடி நீர்மட்டம் உயரும். இந்த திட்டம் வேண்டும் என்று பாமக போராடி வருகிறது. தேர்தலுக்கு முன்பு இளைஞர்கள் போராடியதால் ஜெயலலிதா இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்ற கடந்த பிப்ரவரி மாதம் உறுதியளித்தார்.
மாற்றுத் திட்டம் வேண்டாம்
ஆனால் தற்போது அரசு இதற்கு மாற்றாக காளிங்கராயர் காரமடை திட்டம் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. எங்களுடைய நோக்கம் காமராஜர் காலத்தில் அறிவிக்கப்பட்ட அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
நிலத்தடி நீரை அதிகரிக்க வேண்டும்
இது உபரி நீர் திட்டம். இதைக் கொண்டு வருவதால் யாருக்கும் பாதிப்பு இருக்காது. 1951 முதல் 96 வரை இந்த அணை 26 முறை நிரம்பி வழிந்துள்ளது. உபரி நீர் காவிரி டெல்டா பகுதிக்கு சென்றும் பயனில்லாமல் போகிறது, எனவே உபரி நீரை வறட்சி இருக்கும் பகுதிக்கு திருப்பி நிலத்தடி நீரை அதிகரிக்க வேண்டும்.
கடன் வாங்கியாவது செய்ய வேண்டும்
இலவச திட்டங்களுக்கு கடன் வாங்காமல் நீர்நிலை திட்டங்களை நிறைவேற்ற அதற்கு கடன் பெற்று இந்த திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இதனை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினருடன் இணைந்து போராடி வருகிறோம். இது அரசியல் பிரச்னையல்ல, குடிநீர் பிரச்னை, பொதுப்பிரச்னை, மக்களின் வாழ்வாதாரப் பிரச்னை என்பதை உணர்ந்து அரகு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.