ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழர்களில் 19 பேர் அடையாளம் தெரிந்தது!!
வேலூர் : திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியான 20 தமிழக தொழிலாளர்களில் 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் உள்ள ஸ்ரீநிவாசமங்காபுரத்தில் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் நேற்று காலை நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 20 தமிழக தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திர போலீசாரின் இந்தக் கண்மூடித் தனமான தாக்குதலுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தேசிய மனித உரிமைகள் ஆணையமும் இது தொடர்பாக ஆந்திராவுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது.
இந்நிலையில், இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் பலியான 20 பேரில் 19 பேரின் விபரங்கள் தெரிய வந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் போளுர் வட்டத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்துள்ளனர். வேட்டகிரிபாளையத்தைச் சேர்ந்த பீமன் என்ற முருகன், சசிக்குமார், பெருமாள், அனந்தபுரதைச் சேர்ந்த மூர்த்தி, மகேந்திரின், முனுசாமி, பாலசமுத்திரத்தைச் சேர்ந்த பழனி, மேல்களவாயூரைச் சேர்ந்த பன்னீர்செல்வம், மேல்குச்சனூரைச் சேர்ந்த சின்னசாமி, கண்ணன் என்ற ராஜேந்திரன், வெள்ளிமுத்து, கோவிந்தசாமி ஆகியோர் என போளுர் வட்டாட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதேபோல், தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி அரசநத்தம் பகுதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன், லட்சுமணன், சிவகுமார், லாட்சுமணன், வேலாயுதம் ஆகிய 5 பேரும், இதே மாவட்டம் கருக்கம்பட்டியைச் சேர்ந்த சிவலிங்கம், வெங்கடேஷ் ஆகிய இரண்டு பேரும் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள ஒரு உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இது தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதியில் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு தமிழக தொழிலாளர்களின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் அளிக்கப் படும். இன்னும் அடையாளம் காணப்படாத தொழிலாளியின் உடல் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் பாதுகாக்கப் படும்.












Click it and Unblock the Notifications