ரூ.1000 இடைக்கால நிவாரணம்: அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் வரவேற்பு
சென்னை: புதிய ஊதிய ஒப்பந்தம் தாமதமாவதால், தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக மாதம் ரூ.1000 வழங்கப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
முதல்வரின் அறிவிப்பை அடுத்து மாநில அண்ணாபோக்குவரத்து தொழிற்சங்க செயலாளர் அஸ்லாம் தலைமையில் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

2014-15ம் ஆண்டில் அரசு திட்டங்களுக்கு கூடுதலாக ரூ.1,751.18 கோடி நிதி ஒதுக்கு வதற்கான துணை நிதிநிலை அறிக்கையை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 4ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதன் மீது பேரவையில் நேற்று விவாதம் நடந்தது.
இந்த விவாதத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சி உறுப்பினர்கள், போக்குவரத்து தொழிலாளர்களின் புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தாமதமாவது குறித்து கேள்வி எழுப்பினர்.

விவாதத்துக்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இந்தியாவிலேயே தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறைதான் குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவைகளை பொது மக்களுக்கு வழங்கி வருகிறது. எப்போதெல்லாம் டீசல் விலை உயர்த்தப்படுகிறதோ, அப்போதெல்லாம் அந்த விலை உயர்வு பொதுமக்களை பாதிக்காத வகையில், ரூ.1,298 கோடி அளவுக்கு மானியம் வழங்கி, போக்குவரத்து கழகத்தையும் தொழிலாளர்களையும் தமிழக அரசு பாதுகாத்து வருகிறது.

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் ஊதிய உயர்வு வழங்குவதில் இந்த அரசுக்கு மாற்றுக்கருத்து ஏதுமில்லை. எனினும், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கையும் கருத்தில் கொண்டு, போக்கு வரத்து ஊழியர்களின் நிலையையும் உணர்ந்து, சில முடிவுகளை அரசு எடுத்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால், பேச்சுவார்த்தை தாமதமாகிறது. எனவே, தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் 1.15 லட்சம் அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக மாதம் ஒன்றுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, புதிய ஊதிய ஒப்பந்தம் உரியவாறு மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.
பட்டாசு வெடித்த அண்ணா தொழிற்சங்கம்
முதல்வரின் இந்த அறிவிப்புக்கு அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து கழக ஊழியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பட்டாசுகளை வெடித்த ஊழியர்கள், முதல்வரின் அறிவிப்பை இனிப்பு கொடுத்து கொண்டாடினர்.
பேருந்து பயணிகளுக்கு லட்டு
சாலைகளில் பேருந்தை நிறுத்தி பயணிகளுக்கும் சாக்லேட், லட்டுகளை கொடுத்து மகிழ்ந்தனர். அதேசமயம் முதல்வரின் அறிவிப்புக்கு தொ.மு.ச. ஐ.என்.டி.யூ.சி., எச்.எம்.எஸ்., ஏ.ஏ.எல்.எப். உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்களை ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications