விஸ்வரூபமெடுக்கும் அண்ணா பல்கலை. ஊழல்.. மாணவர்களுக்கு சம்மன்.. லஞ்ச ஒழிப்புத்துறை கிடுக்குப்பிடி
அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேடு தொடர்பாக 17 மாணவர்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
Recommended Video
சென்னை: அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேடு தொடர்பாக 17 மாணவர்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
2017 கல்வி ஆண்டில் அண்ணா பல்கலையில் விடைத்தாள் மறுத்திருத்தம், மறுகூட்டலில் பெரிய அளவில் முறைகேடு நடந்து இருக்கிறது. இன்ஜினியரிங் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களை வெற்றிபெற வைக்க மறுகூட்டலின் போது லஞ்சம் வாங்கி இருக்கிறார்கள்.
ஒரு பாடத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெற்று இருக்கிறார்கள். இதில் 200 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்து இருக்கிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 2015-2018 வரை தேர்வுக்கான கட்டுப்பாட்டாளராக இருந்த ஜி வி உமா தலைமையில்தான் இந்த முறைகேடு நடந்து இருக்கிறது. இவருக்கு கீழ் 9 பேராசிரியர்கள் செயல்பட்டு இருக்கிறார்கள்.
இந்த 10 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்தநிலையில் மறுமதிப்பீட்டு முறைகேடு தொடர்பாக 17 மாணவர்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் பல மாணவர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
24 மதிப்பெண் எடுத்த ஒரு மாணவருக்கு மறுமதிப்பீட்டில் 94 மதிப்பெண் வழங்கப்பட்டு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த 3 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களில் 16,636 மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இவர்கள் லஞ்சம் கொடுத்தார்களா என்று விசாரணை நடக்கிறது.