தேசிய கட்சிகளை தமிழகத்திலிருந்து வேரடி மண்ணோடு அகற்றிய சாதனையாளர் பேரறிஞர் அண்ணா
சென்னை: தேசிய கட்சிகளை தமிழகத்தில் தலையெடுக்கவிடாமல் தட்டி வைத்தது அறிஞர் அண்ணாவின் மிகப்பெரிய வாழ்நாள் சாதனையாகும். இவர் போட்ட விதை இன்று பெரும் ஆலமரமாக வளர்ந்து பலருக்கும் பலன் தந்து கொண்டுள்ளது.
இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்த கட்சி என மார்தட்டி வந்த காங்கிரஸ் கட்சி அப்படி ஒரு தோல்வியை எதிர்பார்த்திருக்காது.
1967ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், திமுக 138 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது.
மாநில கட்சி சாதனை
இந்தியாவில் ஒரு மாநிலக் கட்சி முதன்முறையாக ஆட்சி அமைத்த வரலாற்று சாதனை திமுகவின் மூலமாகத் தமிழகத்தில் நடந்தது. தேசிய கட்சிக்கு இந்தியாவில் நடந்த முதல் வழியனுப்பு விழா தமிழகத்தில் அரங்கேறியது என்றும் இதை சொல்லலாம். இப்படிப்பட்ட வரலாற்று நிகழ்வுக்கு பிறகு, திமுகவின் பொதுச்செயலாளரான அறிஞர் அண்ணா முதல்வராக பொறுப்பேற்றார்.
தமிழ்நாடு பெருமை
இதன்பிறகு திராவிட இயக்க கொள்கைகளை படிப்படியாக அமல்படுத்தினார் அண்ணா. முதலில் அவர் எடுத்ததே அதிரடிதான். 'மெட்ராஸ் ஸ்டேட்' என்று அழைக்கப் பட்டு வந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டி , ஆங்கிலம் தமிழ்- உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இனி தமிழ்நாடுதான் என்ற தீர்மானத்தை 1967ம் ஆண்டு ஜூலை 18ம் நாள் சட்டமன்றத்தில் நிறைவேற்றினார் அண்ணா. நடைமுறைக்கு வந்த இச் சட்டத்தின் மூலம் இந்த மாநிலம் தமிழ்நாடு என்ற பெயரினைப் பெற்றது.
நல்ல திட்டங்கள்
இந்தியாவிலேயே மொழியின் பெயரால் அமைந்துள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான் என்பது இன்னும் நீடிக்கும் சிறப்பு. தமிழ்நாடு என்ற பெயர் உள்ளவரை அண்ணா பெயரும், புகழும் மறையாது என்பதை சொல்லி அறிய வேண்டிய அவசியம் இல்லை.
ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசித் திட்டம், புன்செய் நிலங்களுக்கான வரி ரத்து, குடிசைவீடுகளுக்கு தீ பிடிக்காத கூரை உள்ளிட்டவை அண்ணாவின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட மேலும் பல முக்கியமான மக்கள் நலத் திட்டங்களாகும்.
இருபெரும் திராவிட கட்சிகள்
1969ம் ஆண்டு பிப்ரவரி 3ம் நாள் அண்ணா மரணமடைந்தார். அவரைத் தொடர்ந்து தமிழகத்தின் முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்றார். திமுகவிலிருந்த எம்.ஜி.ஆர், மனக்கசப்பால் 1972 ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை ஆரம்பித்தார். இதன்பிறகு இக்கட்சியும், திமுகவும் மாறி, மாறி ஆட்சியமைத்து வருகின்றன.
அண்ணா போட்ட ஆலமர விதை
1967 முதல் 2016 சட்டசபை தேர்தல் வரை காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் எதுவுமே தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியவில்லை. திராவிடம், தமிழ் என்ற கொள்கைகளை மீறி எந்த கட்சியாலும் தமிழகத்தில் வளர முடியவில்லை. இந்த சாதனைக்கு வித்திட்டவர்தான் பேரறிஞர் அண்ணா. அவர் போட்ட விதை இன்று ஆலமரமாக தளைத்து தளிர்விட்டு காட்சியளிக்கிறது.