ஆரணி லோக்சபா தொகுதி.. திமுக vs அதிமுக vs பாமக.. கடும் போட்டியில் களமாடும் வேட்பாளர்கள்!
ஆரணி: காங்கிரஸும் அதிமுகவும் வென்ற ஆரணி லோக்சபா தொகுதியில் இம்முறை திமுகவும் அதிமுகவும் பாமகவும் சமமாக நின்று களமாடுகின்றன. திமுக, அதிமுக, பாமக மூன்றுமே வலிமையான வாக்கு வங்கியுடன் களம் காண்பதால் கடும் போட்டி நிலவுகிறது.
ஆரணி லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகள்: போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி), செஞ்சி, மயிலம். 2009-ம் ஆண்டு ஆரணி தொகுதியாக மாறிய பின்னர் நடைபெற்ற 3 தேர்தல்களில் காங்கிரஸ் 2 முறையும் அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

ஆரணி தொகுதி மொத்த வாக்காளர்கள்: 14,90,440; ஆண்கள்; 7,31,824, பெண்கள் - 7,58,507: 3-ம் பாலினத்தவர்- 109.
2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
கிருஷ்ணசாமி (காங்கிரஸ்) 3,96,728
சுப்பிரமணியன் (அதிமுக) 2,89,898
மோகனம் (தேமுதிக) 1,05,729
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
ஏழுமலை (அதிமுக)- 5,02,721
சிவானந்தம் (திமுக) 2,58,877
ஏகே மூர்த்தி (பாமக) 2,53,332
விஷ்ணுபிரசாத் (காங்கிரஸ்) 27,717
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
விஷ்ணுபிரசாத் (காங்கிரஸ்) 6,17,760
ஏழுமலை (அதிமுக) 3,86,954
செந்தமிழன் (அமமுக) 46,383
தமிழ் அரசி (நாம் தமிழர் கட்சி) 32,409
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் களம் காணபவர்கள்:
தரணிவேந்தன் (திமுக)
கஜேந்திரன் (அதிமுக)
கணேஷ்குமார் (பாமக)
பாக்கியலட்சுமி (நாம் தமிழர் கட்சி)
ஆரணி தொகுதி நிலவரம் என்ன?: தமிழ்நாட்டின் பட்டு நகரங்களில் ஒன்று ஆரணி. பொதுவாக அதிமுகவும் திமுகவும் கூட்டணி கட்சிகளிடம் தள்ளிவிடும் தொகுதியாக முந்தைய வந்தவாசி இன்றைய ஆரணி இருந்து வருகிறது. இம்முறை அதிமுகவும் திமுகவும் நேரையாக மோதுகின்றன. பாமக, நாம் தமிழர் கட்சியும் களம் காண்பதால் வலிமையான 4 முனைப் போட்டி நிலவுகிறது. விவசாயமும் நெசவும்தான் முதன்மையானவை. ஆரணி தொகுதியில் நூற்றுக்கணக்கான நெல் அரவை ஆலைகள் இயங்குகின்றன. ஆரணி பட்டும் புகழ் பெற்றது. ஆரணி தொகுதியில் வன்னியர்கள் பெரும்பான்மை வாக்காளர்களாக உள்ளனர். அடுத்ததாக முதலியார்கள் உள்ளனர். தலித்துகள் 18%; இஸ்லாமியர்கள் 4% உள்ளனர். ஆரணியில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. இதற்கான நிலமும் கூட வாங்கப்பட்டுள்ளது. அதேபோல அரிசி உற்பத்திக்கான தொழில்பேட்டை ஒன்றை அமைக்கவேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. வந்தவாசி பகுதியில் பெரும் எண்ணிக்கையில் கோரைப்பாய் உற்பத்தி செய்யப்படுகிறது. கோரைப்பாய் உற்பத்தி தொழிலை மேம்படுத்த உதவிட வேண்டும் என்பதும் ஆரணி தொகுதி மக்களின் கோரிக்கை. போளூர் சர்க்கரை ஆலை பிரச்சனை, மயிலம் தமிழ்ப் புலவர் கல்லூரி மேம்பாடு, ஜவ்வாது மலை மேம்பாடு, போளூர் வரை ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், செய்யாறு தனி மாவட்டம், செய்யாறில் வேளாண்மை கல்லூரி, மகளிர் கல்லூரி ஆகியவையும் இந்த தொகுதி மக்களின் கோரிக்கை. ஆரணி தொகுதியில் 2009-ல் தந்தை கிருஷ்ணசாமியும் 2010-ல் மகன் விஷ்ணுபிரசாத்தும் காங்கிரஸ் வேட்பாளர்களாகப் போட்டியிட்டு வென்றனர். ஆரணி தொகுதியில் திமுகவே நேரடியாக களம் இறங்குவதால் அக்கட்சித் தொண்டர்கள் கூடுதல் உற்சாகத்தில் உள்ளனர். பாமகவும் தங்களது வலிமையை காட்ட நல்ல வாய்ப்பாகப் பார்க்கிறது. அதிமுக ஏற்கனவே ஒரு முறை வென்ற தொகுதி. இத்தொகுதியில் திமுக, அதிமுக, பாமக மூன்றுமே வலிமையான வாக்கு வங்கியை கொண்டிருக்கிறது. இந்த ஜாம்பவான்களுடன் நாம் தமிழர் பிள்ளைகளும் களமாடுகின்றனர்.












Click it and Unblock the Notifications