தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு அக்டோபரில் தேர்தல்?
சென்னை: தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 2-வது வாரம் தேர்தல் நடைபெறக் கூடும் என தெரிகிறது.
தமிழக சட்டசபைக்கு கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. வென்று ஆட்சியைத் தக்க வைத்தது. அத் தேர்தலில் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் பட்டுவாடா செய்வதாக புகார்கள் வந்ததால் தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய 2 தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
பின்னர் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் இருந்து சட்ட சபைக்கு தேர்வான அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சீனிவேல் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவர் எம்.எல்.ஏ. ஆக பதவி ஏற்கும் முன்பே காலமாகிவிட்டதால் அத்தொகுதியும் காலியாக இருந்தது.
6 மாதத்துக்குள் தேர்தல்...
இதனால் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் சட்டசபையில் பிரதிநிதித்துவம் இல்லாமல் காலியாக உள்ளன. காலியாக உள்ள இந்த 3 தொகுதிகளுக்கும் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
நவம்பருக்குள்...
அதாவது 3 தொகுதிகளிலும் வரும் நவம்பர் மாதத்துக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். ஆகையால் தேர்தல் அதிகாரிகள் எப்போது தேர்தலை நடத்தலாம் என்று ஆய்வு செய்து வருகின்றனர்.
அக்டோபரில் தேர்தல்?
அக்டோபர் மாதம் 2-வது வாரம் இடைத் தேர்தலை நடத்தலாமா என்று கருத்து கேட்டுள்ளனர். அக்டோபர் மாதம் ஆயுத பூஜை, முகரம், தீபாவளி, கந்த சஷ்டி ஆகிய திருவிழாக்கள் வர உள்ளதால் அதற்கு ஏற்ப 3 தொகுதிகளின் இடைத்தேர்தல் தேதியை முடிவு செய்ய வேண்டிய நிலை தேர்தல் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
சட்டசபை முடிந்த பின்னர்?
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் அடுத்த மாதம் 2-ந்தேதி முடிவடைந்த பின்னர் 3 தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.