ஆரியங்காவு ஐயப்பன் - புஷ்கலாதேவி திருமணம் - குவியும் பக்தர்கள்
சபரிமலையில் பிரம்மச்சாரியாக பக்தர்களுக்கு தரிசனம் தரும் ஐயப்பன், ஆரியங்காவில் தர்மசாஸ்தாவாக அருள் பாலிக்கிறார். அங்குதான் புஷ்கலாதேவியை திருமணம் செய்து கொள்கிறார் என்பது ஐதீகம்.
ஆரியங்காவு: ஆரியங்காவு தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் ஆண்டு தோறும் திருக்கல்யாண திருவிழா, மண்டலாபிஷேக விழா சிறப்பாக நடைபெறுகிறது.
தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது அருள்மிகு ஐயப்பன் கோவில். இங்கு ஐயப்பன் அய்யனாக காட்சி அளிக்கிறார். இங்குள்ள ஐயப்பன் தனது மனைவி புஷ்பகலா தேவியோடு அருள் பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் மண்டல பூஜை கடந்த 21ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது .
இங்குள்ள அய்யனுக்கும், சவுராஷ்டிரா சமுதாய பெண்ணுக்கும் திருமணம் நடந்ததாக வரலாற்று செய்திகள் கூறுகின்றன தர்மசாஸ்தா - புஷ்கலாதேவி திருக்கல்யாண உற்சவம் சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது.
புஷ்கலா தேவி அம்பாள் சவுராஷ்டிரா குலத்தைச் சேர்ந்தவர்.

சவுராஷ்டிரா சம்பந்தி
திருவாங்கூர் மன்னர் மற்றும் தேவசம் போர்டால் சவுராஷ்டிரா மக்களை 'சம்பந்தி' முறையில் திருக்கல்யாணத்தை நடத்தி கொடுக்கும்படி அழைப்பு விடுத்து கவுரவிப்பது வழக்கம். கர்ப்பகிரகத்தில் உற்சவருக்கு மலையாள தாந்திரீக முறைப்படியும், வெளிப்பிரகாரத்தில் பாண்டியநாட்டு முறைப்படியும் திருக்கல்யாணம் நடப்பது வேறெங்கும் இல்லாது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். காரணம் மணப்பெண் மதுரையைச் சேர்ந்த சவுராஷ்டிரா சமூகத்தை சேர்ந்தவர் என்பதனால்தான்.

பகவதி புஷ்கலா தேவி
ஆரியங்காவு அருகே மாம்பழத்துறையில் பகவதி புஷ்கலா தேவிக்கு சகல அபிஷேகங்களும் நடத்தப்பட்டது. சந்தனக்காப்பு சிறப்பு அலங்காரம், மணமகளுக்குரிய சர்வ அலங்காரம், பொங்கல் படைப்பு உற்சவதாரம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் அம்மன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

சவுராஷ்டிரா மக்கள்
மதியம் 2 மணிக்கு சம்பிரதாயப்படி சவுராஷ்டிரா மக்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்கப்பட்டனர். கர்ப்பகிரகத்தில் இருந்து அம்பாள் ஜோதி ரூபத்தை, தந்தரி, சவுராஷ்டிராவினரிடம் வழங்கினார். சன்னதியில் தந்திரி ஜோதி ரூபத்தை பூஜை செய்து கர்ப்பகிரகத்தில் கொண்டு சென்று அய்யனின் ஜோதியோடு ஐக்கியமாக்கினார். சரணகோஷம் முழங்க பக்தர்கள் ஜோதி ரூப ஐக்கியத்தை தரிசித்தனர்.

மாப்பிள்ளை அழைப்பு
காலை பாண்டியன் முடிப்பு என்னும் நிச்சயதார்த்த விழா தொடங்கியது. திருக்கல்யாண நிச்சயதார்த்தத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. பகல் 1 மணிக்கு சமபந்தி விருந்து, அன்னதானம் நடந்தது. மாலை 5.30 மணிக்கு 'தாலிப்பொலி ஊர்வலம்' எனும் 'மாப்பிள்ளை அழைப்பு' ஊர்வலம் சன்னிதானம் முன் துவங்கியது.

ஐயப்பனுக்கு திருமணம்
சன்னிதானத்தில் நடந்த நிச்சயதார்த்தில் அம்பாள் சார்பில் சவுராஷ்டிராவினர் 21 தட்டுக்களில் நிச்சயதார்த்த சடங்குகளுக்கு உரிய பொருட்களுடன் ராஜகொட்டாரம் வந்தனர். தர்மசாஸ்தா சார்பில் திருவாங்கூர் தேவசம் போர்டார் மூன்று தட்டுக்கள் கர்ப்பகிரகத்தில் இருந்து எடுத்து வரப்பட்டு, ராஜகொட்டாரத்தில் 'பாண்டியன் முடிப்பு' எனும் நிச்சயதார்த்த வைபவம் நடைபெற்றது. தர்மசாஸ்தா ராஜ அலங்காரத்தில் பவனிவந்தார்.

திருப்பூட்டு
டிசம்பர் 26ஆம் தேதியான இன்று தர்மசாஸ்தா - புஷ்கலாதேவி திருக்கல்யாணம் இரவு 9 மணிக்கு மேல் துவங்குகிறது. இதை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு மூலஸ்தானத்தில் அபிஷேகம். காலை 10 மணிக்கு ஊஞ்சல் உற்சவம்.

ஐயப்பன் கோவிலில் பக்தர்கள்
திருக்கல்யாணத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ஆரியங்காவு ஐயப்பன் கோவிலுக்கு வந்துள்ளனர்.
வஸ்திர சாஸ்துப்படி பொங்கல் படைப்பு, பகல் 1 மணிக்கு சம்பந்தி விருந்து. மாலை 4 மணிக்கு திருவிளக்கு பூஜை, மாலை 5.30 மணிக்கு வரவேற்பு நிகழ்ச்சி என ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.












Click it and Unblock the Notifications