உடுமலை ராணுவ பள்ளி மாணவர்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம்: ஒரு மாணவர் மரணம்; பெற்றோர்கள் அதிர்ச்சி !
ஈரோடு: உடுமலைப்பேட்டை ராணுவ பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 26 மாணவர்களுக்கு வாந்தி. மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சித்தார்த் (11) என்ற மாணவர் உயரிழந்தார். இந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள அமராவதியில் ராணுவ பயிற்சிப் பள்ளி உள்ளது. இங்கு 6 முதல் 12-ம் வகுப்பு வரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர் விஜயராகவன். இவரது மகன் சித்தார்த் (வயது-11). இவர் இதே பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.
மாணவர் சித்தார்த் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை காலை மாணவர் சித்தார்த் வாந்தி எடுத்துள்ளார். பின்பு அவர் காலை விடுதியில் உணவும் சாப்பிட்டுள்ளார். உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் திடீரென மயங்கி விழுந்தவரை, அவருடன் படிக்கும் மற்ற மாணவர்கள் பார்த்துவிட்டுச் சென்று பள்ளி நிர்வாகத்திடம் தகவல் சொல்லியுள்ளனர்.
இதையடுத்து பள்ளி முதல்வர் கேப்டன் ஸ்ரீதரன், நிர்வாக அதிகாரி பிரசாத் மற்றும் ஆசிரியர்கள் விரைந்து வந்து மாணவரை சிகிச்சைக்காக உடுமலை அரசு மருதுவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் சவுந்தரராஜன் மாணவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
ராணுவ பள்ளி மாணவர் சித்தார்த் இறந்த தகவல் கிடைத்ததும் உடுமலை ஆர்.டி.ஓ. சாதனைகுறள் மற்றும் தாசில்தார் தயானந்தன், டி.எஸ்.பி. விவேகானந்தன், இன்ஸ்பெக்டர்கள் தவமணி, அன்பரசு ஆகியோர் விரைந்து வந்து மாணவரின் உடலை பார்வையிட்டனர்.
இந்நிலையில், அதே பள்ளியில் பயிலும் 6, 7 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் 26 மாணவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, உடனடியாக அவர்கள் உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மாணவர்கள் காலை உணவு சாப்பிட்ட பிறகே உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, உணவில் எதாவது நச்சு கலந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதனிடையே மாணவர் சித்தார்த்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் மாணவனின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன், பிரேத பரிசோதனை செய்யவும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
உரிய விசாரணை நடத்தப்படும் என நிர்வாகம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 24-ம் தேதி வரை பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இராணுவப் பள்ளியில் மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.