40 ஆண்டுகால "ஜாம்".. ஜம் ஜம் நடவடிக்கையால் தீர்த்து அசத்திய ஆரணி டிஎஸ்பி ஜெரினா பேகம்!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கடந்த 40 ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசலால் சிக்கி வந்த நிலையில் தற்போது அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு புதுபொலிவுடன் காட்சியளிக்கிறது.
Recommended Video

ஆரணி: பட்டு நகரம் எனப்படும் ஆரணியில் 40 ஆண்டுகளாக நீடித்து வந்த போக்குவரத்து பிரச்சினைக்கு புதிதாக வந்த டிஎஸ்பி ஜெரினா பேகம் தீர்வு கண்டுள்ளார். இதனால் ஆரணி சாலைகள் விசாலமாக காட்சியளிக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியானது நகராட்சியாகும். இந்த நகரம் பட்டு மற்றும் அரிசிக்கு பெயர் பெற்றதாகும். திருமணம் உள்ளிட்ட சுப விசேஷங்களுக்கு காஞ்சிபுரம் செல்ல முடியாதவர்கள் ஆரணியில் வந்து வாங்கிச் செல்வர்.
அதேபோல் ஆரணி அரிசியை சாப்பிட்டு வளர்ந்தவர்கள் இன்று பணி நிமித்தமாகவும் திருமணமாகி வேறு நகரங்களில் செட்டில் ஆகினாலும் ஓவ்வொரு பயணத்தின்போது ஆரணி அரிசியை வாங்கி செல்வதை தவறுவதில்லை.

போக்குவரத்து நெரிசல்
இத்தகைய பெருமைமிக்க ஆரணி நகரமானது 40 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளது. இதனால் வியாபாரத்தை விஸ்தரிக்க வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்ததால் சாலைகள் குறுகலாகிவிட்டன. பள்ளி செல்லும் நேரம், காலை நேரங்கள் என போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது.

முக்கிய சாலைகள்
இந்த போக்குவரத்து நெரிசலால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வாகனங்கள் போக வழியில்லாமல் பஜார் வழியாக செல்லாமல் அங்குள்ள மைதானம் வழியாக மக்கள் தங்கள் பிரயாணம் செய்து வந்தனர். அவ்வப்போது ஆட்சி பொறுப்பேற்கும் போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். ஆனால் அதிகாரிகள் சென்றவுடன் பழைய படி கடை விரிக்கத் தொடங்கிவிடுவர்.

கடும் நடவடிக்கை
ஆரணி டிஎஸ்பியாக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெரினா பேகம் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைய உள்ளது. இந்நிலையில் 40 ஆண்டுகால பிரச்சினைக்கு தீர்வு காண அதிரடியாக நடவடிக்கை எடுத்தார். அதாவது முக்கிய சாலைகளான காந்தி மார்க்கெட், மார்க்கெட் வீதி, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், சத்தியமூர்த்தி சாலை என இங்குள்ள ஆக்கிரமிப்புகளை புல்டோசர் கொண்டு அகற்றினார்.

மீண்டும் கடை வைக்காத வண்ணம்
அகற்றப்பட்டவுடன் மீண்டும் வியாபாரிகள் கடைவைத்தால் அவர்களுக்கு முதல் கட்டமாக ரூ.1000 முதல் ரூ. 5000 வரை அபராதம் விதிப்பது என்று உத்தரவிட்டுள்ளார். மீறினால் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்றும் அறிவித்தார். மேலும் தங்கள் கடைகளுக்கு முன் வேறு ஒருவருக்கு கடை வைக்க அனுமதி அளித்தால் அந்த கடைக்கு சீல் வைக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

வியாபாரிகள் ஒத்துழைப்பு
40 ஆண்டுகளாக சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு குறுகிய காலத்திலேயே நிரந்த தீர்வு கண்டுள்ளதால் புதுபொலிவுடன் ஆரணி காட்சியளிக்கிறது. இதற்கு காரணமான ஜெரினா பேகத்தை மக்கள் கொண்டாடுகின்றனர். மேலும் இதற்கு பொதுமக்களும், வியாபாரிகளும் ஒத்துழைப்பு கொடுத்ததாக சன் செய்திக்கு அளித்த பேட்டியில் ஜெரினா பேகம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications