கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: தொடர்ந்து ஆஜராகாத 3 பேருக்கு பிடிவாரண்ட்.. நீதிபதி உத்தரவு!
நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 3 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் ஆகியோர் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை உதகை அமர்வு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மனோஜ், ஜித்தன் ஜாய் மட்டுமே இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கில் ஆஜராகாத தீபு, சதீசன் மற்றும் சந்தோஷ் சாமி ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. சில நாட்களில் கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து, அதே ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி கொடநாடு பங்களாவில் சிசிடிவி ஆபரேட்டராக இருந்த தினேஷ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். பின்னர், கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி கனகராஜ் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த கோடநாடு சம்பவத்தில் காவல்துறை 10 பேரை கைது செய்த நிலையில், தற்போது அனைவரும் ஜாமீனில் உள்ளனர்.
கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை, உதகை நீதிமன்றத்தில் கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வரை 500க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மனோஜ், ஜித்தன் ஜாய் மட்டுமே இன்று உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, விசாரணை அதிகாரிகள் தரப்பில், இவ்வழக்கில் வெளிநாடுகளில் விசாரணை மேற்கொள்ளவும், பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் விசாரணை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதிக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி முரளிதரன், விசாரணையின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், இன்று வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத தீபு, சதீசன் மற்றும் சந்தோஷ் சாமி ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வழக்கு விசாரணை ஜனவரி மாதம் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications