சுயேச்சை வேட்பாளரை ஆதரிப்பேன்னு சொன்ன விஷால் எங்கப்பா?
ஆர்கே நகர் தேர்தலில் தன்னுடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்டபோது சுயேச்சை வேட்பாளரை ஆதரிப்பேன் என்று சொன்ன நடிகர் விஷால் மனு நிராகரிக்கப்பட்ட கையோடு போனவர் தான் அதன் பிறகு தொகுதி பக்கம் தலைகாட்டவேயில்லை.
சென்னை : ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கலையே பரபரப்பாக்கிய நடிகர் விஷால் தன்னுடைய மனு நிராகரிக்கப்பட்ட போது தான் சுயேச்சை வேட்பாளரை ஆதரிப்பேன் என்று கூறினார். ஆனால் இன்றைய தினம வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் இது வரை தொகுதி பக்கம் தலைகாட்டவே இல்லை.
சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தல் நடக்குமா என்பதே ஒரு பரபரப்பான செய்தி என்றால், இந்த முறை திடீரென சுயேச்சையாக களமிறங்கிய நடிகர் விஷாலின் அதிரடி வரவு ஆர்கே நகர் தேர்தல் களத்தை மேலும் சூடாக்கியது. திடீரென தேர்தலில் போட்டியிடுவதாக சொன்ன விஷால் அடுத்த 2 நாட்களில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
விஷால் வரிசையில் வந்து தான் மனு தாக்கல் செய்ய வேண்டும், அவருக்கு நடிகர் என்பதால் விஐபி அந்தஸ்து தரக்கூடாது என்று சுயேச்சைகள் தெரிவித்தன. இதனையடுத்து வரிசையில் காத்திருந்து மனு தாக்கல் செய்தார் விஷால். ஆர்கே நகர் மக்களுக்கு நல்லது செய்யவே போட்டியிடுவதாக சொன்னார் விஷால்.
இதனையடுத்து நடைபெற்ற வேட்பு மனுக்கள் பரிசீலனையின் போது விஷாலை முன்மொழிந்து கையெழுத்திட்ட 2 பேர் தாங்கள் கையெழுத்திடவில்லை என்று கூறியதால் அவரின் மனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து மறியல், ஆதாரம் ஒப்படைப்பு என்று இரவு 10 மணி வரை போராடி கடைசியாக தன்னுடைய மனு ஏற்கப்பட்டதாக கூறிவிட்டு சென்றார் விஷால்.
ஆனால் அவர் வீடுபோய் சேருவதற்குள் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் நடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தது. இதனையடுத்து கொந்தளித்த விஷால் ஜனநாயகம் இப்படியாகிவிட்டதே என்று குய்யோ முறையோ என்று கூப்பாடு போட்டார். மேலும் தான் சுயேச்சை வேட்பளார் ஒருவரை ஆதரித்து பிரச்சாரம் செய்வேன், ஆர்கே நகர் மக்களுக்கு நல்லது செய்தே தீருவேன் என்றெல்லாம் வீரவசனம் பேசினார்.
ஆனால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட கையோடு போனவர் தான், அதன் பிறகு தொகுதி பக்கமும் வரவில்லை, ஆர்கே நகரில் எந்த சுயேச்சை வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரமும் செய்யவில்லை. அரசியலுக்கு வரும் முன்னரே கொடுத்த வாக்கை காப்பாற்றாதவர் நாளை எப்படி மீண்டும் மக்களை சந்திப்பார்.