பாமக சார்பில் போட்டியிட விரும்புவோர் 27–ந்தேதி முதல் விருப்ப மனு தரலாம்.. ராமதாஸ்
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் வரும் 27ம் தேதி முதல் விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்யலாம் என பாமக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆயத்தப்பணிகளை கட்சிகள் தொடங்கி விட்டன.
அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள், நாளை முதல் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என கட்சியின் பொதுச் செயலாளரான முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இந்நிலையில், பாமகவும் தங்கள் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவரிடமிருந்து விருப்ப மனுவைப் பெற தேதி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைகளுக்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. அத்தேர்தலை எதிர்கொள்ள பாட்டாளி மக்கள் கட்சி தயாராகி விட்டது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை விரைந்து வெளியிடுவதற்கு வசதியாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ம.க. சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து வரும் 27-ந்தேதி (புதன்கிழமை) முதல் விருப்ப மனுக்கள் பெறப்படவுள்ளன.
திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் உள்ள பா.ம.க. அலுவலகத்தில் ஜனவரி 27-ந்தேதி முதல் பிப்ரவரி 5-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை தினமும் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும். மனுவுடன் கட்டணமாக ரூ.5,000 செலுத்த வேண்டும். மனுக்கள் பெறப்பட்ட பின்னர் அவற்றை ஆய்வு செய்து, இரு மாநிலங்களிலும் போட்டியிட விண்ணப்பித்தவர்களை அழைத்து நேர்காணல் நடத்தி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.