பி.எச்டி. பட்டம் பெறாத உதவி பேராசிரியர்களை நீக்க நடவடிக்கை - துணைவேந்தர் வார்னிங்
நெல்லை: பி.எச்டி பட்டம் பெறாத உதவி பேராசிரியர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பாஸ்கர் கூறுகையில், நெல்லை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 73 கல்லூரிகளில் கட்டமைப்பு வசதி, ஆசிரியர்கள் தகுதிகள், ஆய்வக வசதிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

அந்த கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள், உள் கட்டமைப்பு வசதிகள் குறித்து புள்ளி விவரங்கள் தயாரிக்கப்பட்டு பல்கலை மானிய குழு, பல்கலைக்கழக விதிப்படி இருக்கிறதா என்று ஆய்வு செய்யப்படுகிறது.
இந்த புள்ளி விவரங்கள் டிஜிட்டல்மயமாக்கப்படும். ஒரு சில கல்லூரிகளில் குறைகள் இருப்பதாக தெரிய வந்துள்ளதால் அதை களைய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் கல்லூரிகளில் எம்.பில். பட்டம் படித்த பேராசிரியர்களாக பணியாற்றுபவர்கள் 50 சதவீதம் பேர் உள்ளனர்.
பல்கலைக்கழக மானிய குழு விதிகளின்படி கல்லூரி பேராசிரியர் பணிக்கு நெட், ஸ்லேட் அல்லது பிஎச்டி பட்டம் பெற்றிருக்க வேண்டும். உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக வெகு விரைவில் சம்பந்தப்பட்ட உதவி பேராசிரியர்கள் இந்த கல்வி தகுதியை பெற வேண்டும்.
நெல்லை பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் 22 பேர் பேராசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கும் இந்த உத்தரவு பொருத்தும். இவ்வாறு தகுதி பெறாத பேராசிரியர்கள் நீக்கப்படுவர். சில பாடங்களுக்கு பேராசிரியர்கள் கிடைப்பது அரிது. அந்த பாடங்களுக்கு மட்டும் பேராசிரியர்கலுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications