For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தள்ளாத வயதிலும் தளராமல் போராடியவர்... பாசத்துடன் பசியாற்றியவர் வைகோவின் தாயார்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: "எங்க ஊருக்கு சாராயக்கடை வேண்டாம்... எங்க ஊர் மக்கள் குடிச்சு சீரழிவதை இனியும் பார்க்க முடியாது" என்று தன்னுடைய தள்ளாத வயதிலும் தடுமாறாமல் போராட்டங்களில் பங்கெடுத்து குரல் எழுப்பியர் வைகோவின் தாயார் மாரியம்மாள். தனி ஈழம் கோரி நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அவர், தன்னுடைய 95 வயதில் கலிங்கபட்டியில் மதுக்கடையை மூடக்கோரி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த போராட்டத்திலும் பங்கேற்று குரல் கொடுத்தவர்.

நுரையீரல் சளியால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக நேற்று மாலை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், இன்று காலை ஏழு மணி வரையிலும் நல்ல நினைவுடன் இருந்தார். டெல்லியில் இருந்து நேற்று இரவு விமானத்தில் சென்னை வந்து சேர்ந்த வைகோ அவர்கள், இன்று காலை விமானத்தில் தூத்துக்குடிக்குப் புறப்பட்டுச் சென்றார். திருநெல்வேலிக்கு வைகோ வருகின்ற தகவலை அவரது தம்பி ரவிச்சந்திரன் தாயாரிடம் தெரிவித்து இருக்கின்றார். திடீரென, காலை 9.05 மணி அளவில் அமைதியாக அவர் உயிர் பிரிந்தது.

பசியாற்றிய தாயார்

பசியாற்றிய தாயார்

மாரியம்மாள் என்ற பெயருக்கு ஏற்ப, கலிங்கப்பட்டி இல்லத்திற்கு வருகை தருகின்ற அனைவருக்கும் வாரிவாரி உணவு அளித்துப் பசியாற்றி, பண்பின் இருப்பிடமாகத் திகழ்ந்தார். அரசியல் களத்தில் வைகோவுக்குப் பக்கபலமாக இருந்தார். சோதனைகள் சூழ்ந்த வேளைகளில் எல்லாம் ஆறுதலும் தேறுதலும் தந்தார். எதற்கும் அஞ்சாத மன உறுதி படைத்தவர் மாரியம்மாள்.

மன்னிப்புக் கடிதம்

மன்னிப்புக் கடிதம்

நெருக்கடி நிலை காலத்தில் சேலம் சிறையில் வைகோவைச் சந்தித்தபோது, ‘மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் நம்ம ஐயாவை விடுதலை செய்து விடுவார்களாமே? என்று வயற்காட்டுப் பெண்கள் சொன்னதை வைகோவிடம் மாரியம்மாள் கூறினார். ‘அதற்கு நீங்கள் என்னம்மா சொன்னீர்கள்?' என்று வைகோ கேட்டபோது, ‘என் மகன் கொலை செய்தானா? கொள்ளை அடித்தானா? எதற்காக மன்னிப்புக் கடிதம் கொடுக்க வேண்டும்? அந்த அம்மா (இந்திரா காந்தி) எத்தனை ஆண்டுகள் என் மகனைச் சிறையில் அடைத்துவைத்து இருப்பார் என்று சொன்னேன்' என்றார் மாரியம்மாள்.

விடுதலைப்புலிகளுக்கு பசியாற்றியவர்

விடுதலைப்புலிகளுக்கு பசியாற்றியவர்

முன்வைத்த காலைப் பின்வைக்கக் கூடாது; தொண்டைக்குழியில் ஜீவன் உள்ளவரை போராட்டத்தைக் கைவிடக்கூடாது என்ற உணர்வை ஊட்டியவர். இலங்கையில் இந்திய இராணுவத்தை எதிர்த்து விடுதலைப்புலிகள் களத்தில் நின்றபோது, காயம்பட்டுக் கை, கால்களை இழந்து, குற்றுயிராய் வந்து சேர்ந்த 37 விடுதலைப்புலிகளைக் கலிங்கப்பட்டி இல்லத்தில் ஓராண்டுக்கும் மேலாக வைத்துப் பராமரித்து உணவு அளித்துப் பாசம் காட்டிப் பாதுகாத்தவர் மாரியம்மாள்.

பொடா சட்டத்திற்கு அஞ்சாதவர்

பொடா சட்டத்திற்கு அஞ்சாதவர்

பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டபோது கலிங்கப்பட்டி வீட்டைச் சோதனையிட வந்த காவல்துறையினர், தமிழ்த்தேசியத் தலைவர் பிரபாகரனின் படத்தைக் கழற்றியபோது, ‘அந்தப் படத்தை ஏன் எடுக்கின்றீர்கள்? ‘அந்தப் பிள்ளையும் என் மகன்தான். அதைக் கழற்றாதீர்கள்' என்று சொல்லித் தடுத்தார்.

உண்ணாவிரதப் போராட்டங்கள்

உண்ணாவிரதப் போராட்டங்கள்

செண்பகவல்லி அணைக்கட்டைப் புதுப்பிக்கக் கோரி வாசுதேவநல்லூரில் வைகோ தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதம், சங்கரன்கோவில், கோவில்பட்டி, திருநெல்வேலி, கலிங்கப்பட்டியில் நடைபெற்ற பல்வேறு அறப்போராட்டங்கள் உண்ணாவிரதங்கள் அனைத்திலும் முன்வரிசையில் பங்கேற்றவர். உடல் நோயையும் பொருட்படுத்தாமல், சொட்டுத் தண்ணீரும் பருகாமல் உறுதியை வெளிப்படுத்தினார். பாலச்சந்திரன் படுகொலையைக் கண்டித்துக் கலிங்கப்பட்டியில் பெண்களைத் திரட்டி உண்ணாவிரதம் இருந்தார்.

தளராத தாயார்

தளராத தாயார்

2014 நாடாளுமன்றத் தேர்தலில் வைகோ தோல்விச் செய்தி கேட்டுக் கிராமத்துப் பெண்கள் அழுதபோது, ‘ஓட்டுக்குப் பணம் கொடுத்தார்கள்; அதனால் என் மகன் ஜெயிப்பது கஷ்டம் என்று எனக்கு முன்பே தெரியும்' அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

மதுக்கடை அடைப்பு

மதுக்கடை அடைப்பு

சசிபெருமாள் மறைவுச் செய்தி கேட்டவுடன் வீட்டில் இருந்து புறப்பட்டு, கலிங்கப்பட்டி மதுக்கடையை இழுத்து மூட வேண்டும் எனப் போராட்டக்களத்திற்குத் தாமாகவே வந்து நடுத்தெருவில் அமர்ந்தார். செய்தி அறிந்து வைகோ அங்கே சென்றார். போராட்டம் வெடித்தது. கலிங்கப்பட்டி மதுக்கடை மூடப்பட்டது. தமிழகம் எங்கும் பெண்கள் களத்திற்கு வந்தனர். மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம் வலுத்தது.

மாநாடுகளில் பங்கேற்பு

மாநாடுகளில் பங்கேற்பு

மறுமலர்ச்சி தி.மு.கழகம் நடத்திய அனைத்து மாநாடுகளிலும் பங்கேற்றவர். ‘முக்கியமான மாநாடுகள் நிகழ்ச்சிகள் நடக்கும்போது நான் இறந்துபோய், நிகழ்ச்சிக்குப் பாதிப்பு வந்துவிடக் கூடாதே' என்று கூறுவாராம். மூச்சுத்திணறல் காரணமாக நேற்று இரவு திருநெல்வேலியில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இன்று காலை இயற்கை எய்தினார்.

மாரியம்மாள் இறுதி நிகழ்வுகள், நாளை காலை (7.11.2015) காலை 11 மணி அளவில் கலிங்கப்பட்டியில் நடைபெறும் என்று கலிங்கப்பட்டியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
A her 95 years, Mariammal, the late mother of MDMK chief Vaiko led many protests for the people. In particular she came to the streets to fight against Tasmac shops.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X