நாங்குநேரி அருகே.. 4 வழி சாலையில்.. பட்டப் பகலில் துணிகரம்.. நகை வியாபாரியிடம் ரூ.1.5 கோடி கொள்ளை
நெல்லை: நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே பட்ட பகலில் நகை வியாபாரியிடம் இருந்து ரூ.1.5 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சினிமா பாணியில் காரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் பணத்தை பறித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே இன்று காலை சினிமா பாணியில் நகை வியாபாரியிடம் இருந்து ரூ.1.5 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. எப்போதும் வாகனங்கள் பரபரப்பாக செல்லக் கூடிய தங்க நாற்கர சாலையில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் ஏற்படுத்தியுள்ளது. சினிமாவை விஞ்சும் வகையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் குறித்த விவரம் வருமாறு: -

நெல்லை டவுனை சேர்ந்தவர் சுஷாந்த். நகைக்கடை வைத்திருக்கும் இவர் தனது கடைக்கு தேவையான நகைகளை வாங்குவதற்காக கேரளாவிற்கு காரில் புறப்பட்டுள்ளார். காரில் இவருடன் இரு உதவியாளர்களும் இருந்துள்ளனர். நகைகளை வாங்குவதற்காக கையில் ரூ.1.5 கோடி பணம் வைத்திருந்ததாக தெரிகிறது. இவர்கள் நெல்லை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மூன்றடைப்பு ரயில்வே மேம்பாலம் அருகே சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது, இவர்களது காரை பின் தொடர்ந்து இரண்டு கார்களில் மர்ம நபர்கள் வந்துள்ளனர். காருக்கு முன்னும் பின்னும் வந்த நபர்கள் திடீரென காரை நிறுத்தி, நகை வியாபாரியை தாக்கியுள்ளனர். நகை வியாபாரி சுஷாந்தை தாக்கி அவரிடம் இருந்து பணம் பறிக்க முயன்றுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பேருந்தில் வந்த ஓட்டுநர் இதை பார்த்துள்ளார்.
உடனே பேருந்தை நிறுத்தி கொள்ளையை தடுக்க பயணிகள் மற்றும் ஓட்டுநர், நடத்துனர் ஆகியோர் முயற்சித்து இருக்கிறார்கள். இதனால் சுதாரித்த மர்ம நபர்கள், சுஷாந்த் உடன் அவரது காரிலேயே தப்பி ஓடினர். நாங்குநேரி சுங்கசாவடிக்கு வந்தால் மாட்டிக்கொள்வோம் என்பதால் நெடுங்குளம் வழியாக சென்று சுஷாந்தையும் அவரது காரையும் விட்டு விட்டு பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.

பணம் கொள்ளையடிக்கப்பட்டதால் அதிர்ந்து போன சுஷாந்த் உடனடியாக தனது குடும்பத்தினரிடம் இது குறித்து தகவல் தெரிவித்து விட்டு மூன்றடைப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். பணத்தை கொள்ளையடித்த நபர்கள் நன்கு திட்டமிட்டு இந்த கொள்ளையை அரங்கேற்றியது போல் தெரிவதால் விசாரணைக்கு பிறகே இந்த சம்பவத்தின் முழு விவரம் தெரியவரும்.
எனினும், பரபரப்பான சாலையில் நகை வியாபாரியை தாக்கி ரூ.1.5 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நெல்லையில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் நான்கு வழிச்சாலை எப்போது படு பிசியாக இருக்கும். 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து அதிகம் காணப்படும் பிரதான சாலை இது.
அதுவும் காலை நேரங்களில் வெளியூர்களில் இருந்து நெல்லை மாவட்டம் மற்றும் கன்னியாகுமரிக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் மற்றும் வாகனங்கள் என்ணிக்கை அதிக அளவில் இருக்கும். இந்த தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த கொள்ளை சம்பவம் சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் அமைந்துள்ளது.

நெல்லையில் இருந்து 20 கி.மீட்டர் தொலைவில் நடந்துள்ள கொள்ளை சம்பவம் குறித்து நான்குநேரி காவல் ஆய்வாளர் விசாரணை நடத்தி வருகிறார். நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் நிகழ்விடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். எனவே இது குறித்த கூடுதல் தகவல்கள் இனிமேல்தான் தெரியும்.












Click it and Unblock the Notifications