பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் அட்டாக்பாண்டிக்கு 15 நாள் நீதிமன்ற சிறை... போலீஸ் காவல் நிராகரிப்பு
மதுரை : மும்பையில் தலைமறைவாக இருந்து கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டி மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய போலீசாரின் மனுவை நீதிபதி நிராகரித்து விட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பகுதியைச் சேர்ந்தவர் அட்டாக் பாண்டி. இவர் மீது மதுரை, அவனியாபுரம், கீரைத்துரை, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை உள்பட பல காவல்நிலையங்களில் கொலை, மிரட்டல் மோசடி உள்பட 20 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆறு வழக்குகளில் பிடிவாரண்ட் உள்ளது.
இந்நிலையில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்த பொட்டு சுரேஷ் கடந்த 2013 ஜனவரி 31 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என 17 பேர் சேர்க்கப்பட்டனர். சரணடைந்தவர்கள் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக அட்டாக் பாண்டி சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் தேடப்பட்ட அவர் தலைமறைவானார். போலீசார் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
சுமார் இரண்டரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அட்டாக் பாண்டி, மும்பையில் திங்கள்கிழமை மகாராஷ்ட்ர மாநிலம் நவி மும்பையில் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அட்டாக் பாண்டி விமானம் மூலம் மதுரைக்கு அழைத்து வரப்பட்டார். மதுரை மாநகர துணை கமிஷனர் சமந்த் ரோகன் ராஜேந்திரா தலைமையிலான படை அழைத்து வந்தது. இன்று (செவ்வாய்) காலை 7.30 மணி அளவில் விமான நிலையத்தின் பின் பக்கமாக அவர் அழைத்துச் செல்லப்பட்டார். மதுரை சுப்ரமணியபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை, அங்கிருந்து ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அட்டாக் பாண்டியின் மனைவி தயாளு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளதால், அவர் இன்று மதுரை ஜூடிஷியல் மேஜிஸ்ட்ரேட் 2 வது எண் நீதிமன்றத்தில் நீதிபதி பாரதிராஜா முன்பு மாலை 6 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டார்.
பொட்டு சுரேஷ் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என போலீசார் மனு அளித்தனர். ஆனால் நீதிபதி பாரதிராஜா, அட்டாக்பாண்டியை அக்டோபர் 6 ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டார்.