என்ன அழகிரி சார்... ஆதங்கத்தை கொட்டாமலேயே போயிட்டீங்க?
பேரணி நடத்தியதில் எந்த நோக்கமும் இல்லை என முக அழகிரி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: பேரணி நடத்தும் நாளன்று எனது ஆதங்கத்தை தெரிவிப்பேன் என்று கூறிய அழகிரி இன்று பேரணி நடத்தியதில் எந்த நோக்கமும் இல்லை என முக அழகிரி தெரிவித்துள்ளார்.
2014ஆம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்டார் முன்னாள் மத்திய அமைச்சரும் கருணாநிதியின் மகனுமான அழகிரி. கருணாநிதி மறைவுக்கு பிறகு தன்னை திமுகவில் சேர்த்துக்கொள்வார்கள் என எதிர்பார்த்தார்.
ஆனால் ஸ்டாலின் அதுகுறித்து வாய்திறக்கவே இல்லை. அதற்கான அறிகுறியும் கட்சியில் தெரியவில்லை.
அழகிரியை விளாசிய அன்பழகன்
மாறாக கடந்த 26ஆம் தேதி நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஸ்டாலின் ஆதரவாளரான ஜெ அன்பழகன் அழகிரியை சரமாரியாக விளாசினார். உறவை துண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஆதங்கத்தை தெரிவிப்பேன்
இதைத்தொடர்ந்து கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அழகிரி செப்டம்பர் 5ஆம் தேதியான இன்று கருணாநிதி நினைவிடம் வரை அமைதி பேரணி நடத்தப்படும் என்றார். அன்று தனது ஆதங்கத்தை தெரிவிப்பேன், முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்றார்.
அழகிரி ஆலோசனை
இதைத்தொடர்ந்து கடந்த 28ஆம் தேதி திமுக தலைவராக பதவியேற்றார் ஸ்டாலின். இந்நிலையில் தனது ஆதரவாளர்களுடன் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஆலோசனை நடத்தினார் அழகிரி.
எந்த சிக்னலும் வரவில்லை
கட்சியை காப்பாற்ற வேண்டும் என்று கூறிய அவர் திடீரென திமுகவில் சேர்த்துக்கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார் என்றார். ஆனாலும் ஸ்டாலின் தரப்பில் இருந்து எந்த சிக்னலும் வரவில்லை.
நினைவிடத்தில் அஞ்சலி
இந்நிலையில் இன்று திருவல்லிக்கேணி காவல்நிலையம் முதல் கருணாநிதி நினைவிடம் வரை அமைதி ஊர்வலம் நடத்தினார் அழகிரி. இதைத்தொடர்ந்து கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
ஆதங்கத்தை கொட்டவில்லை
அப்போது பேரணிக்கு எந்த நோக்கமும் இல்லை ; கருணாநிதி இறந்த 30-ம் நாளில் அஞ்சலி செலுத்தவே பேரணி நடத்தப்பட்டது என்றார். பேரணி நடத்தப்படும் நாளில் ஆதங்கத்தை கொட்டுவேன் என்று கூறிய அழகிரி, இன்று எதையும் கூறாமல் சும்மாதான் பேரணி நடத்தப்பட்டது பேரணிக்கு வந்தவர்களுக்கு நன்றி என கூறிவிட்டு சென்றுள்ளார்.
புஸ்ஸான எதிர்பார்ப்பு
இதனால் இன்று முக்கிய அறிவிப்பு வரும் ஸ்டாலினை விளாசுவார் என எதிர்பார்த்தவர்களின் நினைப்பு புஸ்ஸாகி போயுள்ளது.