அழகிரியும், ஸ்டாலினும் இணையும் வேளையில்.. கருணாநிதி சுகவீனம்.. தொண்டர்கள் கவலை
மு.க.அழகிரியும், மு.க.ஸ்டாலினும் நேற்று சந்தித்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு சுகவீனம் ஏற்பட்டிருப்பது திமுகவினருக்கும், அழகிரி ஆதரவாளர்களுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: திமுகவிலிருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி நேற்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த நிலையில் அவருக்கு மீண்டும் திமுகவில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு சுகவீனம் ஏற்பட்டிருப்பதால் திமுகவினர் கவலை அடைந்துள்ளனர்.
திமுகவிலிருந்து நீக்கப்பட்ட அழகிரி நீண்ட நாட்களாக மீண்டும் கட்சியில் சேர முயற்சித்து வருகிறார். அவருக்காக கருணாநிதி குடும்பத்தினர் பலர் கருணாநிதியையும், ஸ்டாலினையும் இதுதொடர்பாக தொடர்ந்து பேசி வருகின்றனர்.
ஆரம்பத்தில் இதில் கருணாநிதி ஆர்வம் காட்டவில்லை. ஸ்டாலினுக்கு ஆதரவாகவே இருந்து வந்தார். ஆனால் சமீபத்தில் கருணாநிதி மனம் மாறி அழகிரியை சேர்க்க ஆதரவு தெரிவித்தார்.
ஸ்டாலின் பிடிவாதம்
ஆனால் அழகிரியை திமுகவில் மீண்டும் சேர்க்க ஸ்டாலின் விரும்பவில்லை. அதற்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதனால் அந்த முயற்சிகள் தடைபட்டு வந்தன.
சுகவீனத்தால் ஏற்பட்ட சந்திப்பு
இந்த நிலையில்தான் நேற்று திடீரென ஸ்டாலின் - அழகிரி சந்திப்பு எதேச்சையாக நடந்தேறியது. கருணாநிதியைச் சந்திக்க கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தார் அழகிரி. அவர் வந்த நேரத்தில் அங்கு ஸ்டாலினும் இருந்ததால் இருவருக்கும் தர்மசங்கடமானது.
சந்தித்துப் பேச்சு
இருப்பினும் இருவரும் சந்தித்துப் பேசிக் கொண்டனர். இந்த சந்திப்பின்போது என்ன பேசப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் திமுகவினர் மத்தியில் இது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் சந்தித்துக் கொண்ட தருணம் இது.
மீண்டும் திமுகவில்
மீண்டும் அழகிரி திமுகவில் சேர இது வழிவகுக்கும். திமுகவின் செயல்தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்கும்போது அழகிரிக்கும் மீண்டும் பொறுப்பு கிடைக்கும் என்றெல்லாம் திமுகவினர் மத்தியில் பேச்சு கிளம்பியது.
திடீர் சுகவீனம்
இந்த நிலையில்தான் கருணாநிதிக்கு திடீரென சுகவீனம் ஏற்பட்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பிரிந்திருந்த அண்ணனும், தம்பியும் இணையும் தருவாய் கூடி வந்துள்ள நிலையில் கருணாநிதிக்கு சுகவீனம் ஏற்பட்டிருப்பது திமுகவினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.