கோபாலபுரத்தில் காத்திருக்கிறார் மு.க.அழகிரி... கருணாநிதிக்காக!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியைப் பார்ப்பதற்காக அவரது மூத்த மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி, கோபாலபுரம் இல்லத்தில் காத்திருக்கிறாராம். கருணாநிதியைச் சந்திக்காமல் போக மாட்டேன் என்று அவர் கூறியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கொடி பிடித்த தனது ஆதரவாளர்களை நீக்கியதைக் கண்டித்து அழகிரி தொடர்ந்து பேசவே, அவரை கட்சியை விட்டு முதலில் சஸ்பெண்ட் செய்தனர். பின்னர் நிரந்தரமாக நீக்கி விட்டனர்.

இருப்பினும் அவரை மீண்டும் திமுகவில் சேர்ப்பது தொடர்பாக கருணாநிதி குடும்பத்திற்குள் உள்ள அழகிரி ஆதரவு உறுப்பினர்கள் முயன்று வருகின்றனர். ஆனால் ஸ்டாலின் தரப்பில் அதற்கு முட்டுக்கட்டை போட்டு வருவதாக தெரிகிறது. இந்த நிலையில், திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் தேர்தல் தொடர்பாக திமுகவில் சலசலப்பு கிளம்பியது. இந்தப் பின்னணியில், ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை கிளம்பி வந்தார் அழகிரி. இது பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது.
வந்தவர் திமுக திருந்த வேண்டும், திருடர்கள் திருந்த வேண்டும் என்று பேசப் போக, அவருக்கு ஆர்.எஸ்.பாரதியை விட்டு திமுக தலைமை பதிலடி கொடுத்தது.
இந்த நிலையில் இன்று திடீரென கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தார் அழகிரி. அங்கு தனது தாயார் தயாளு அம்மாளைச் சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் கருணாநிதியையும் பார்த்து விட்டுப் போவதாக கூறிய அவர் காத்திருந்தார். ஆனால் கருணாநிதி வருவதாக தெரியவில்லை. இருப்பினும் கருணாநிதி வரும் வரை காத்திருக்கப் போவதாகவும், அவர் வந்ததும் பார்த்து விட்டுப் போவதாகவும் கூறி வீட்டிலேயே காத்திருக்கிறாராம் அழகிரி. இதனால் அங்கு பரபரப்பு காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications