ஜெ. தரப்பு என்னை மிரட்டியது இதற்காகத்தான்... பி.வி.ஆச்சார்யா
குறிப்பாக, குற்றம் சாட்டப்பட்டவரிடம் விசாரணை நடத்த ஜெயலலிதாவை நேரில் ஆஜராக வேண்டும் என வலியுறுத்தினேன். அவர் எழுத்து மூலமாக அறிக்கை சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.
குற்றவியல் நடைமுறை சட்டம் 313வது பிரிவின்படி குற்றவாளி நேரில் ஆஜராகி வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என நான் நீதிமன்றத்திடம் வலியுறுத்தினேன். ஜெயலலிதா தரப்பில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல், பாதுகாப்பு விஷயங்களை காரணம் காட்டி எழுத்து மூலமாக கொடுப்பதாகக் கூறினர். நான் ஏற்கவில்லை.
பின் வீடியோ கான்பரன்சிங் மூலமாக பதிலளிப்பதாக கூறினார்கள். அதையும் நான் ஏற்காமல் நேரில் ஆஜராகி வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்று உறுதியாக கூறினேன்.
எனது வேண்டுகோளை ஏற்று அப்போது தனி நீதிமன்ற நீதிபதியாக இருந்த மல்லிகார்ஜுனைய்யா, குற்றவாளிகள் நேரில் ஆஜராகி வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதை எதிர்த்து ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், உச்ச நீதிமன்றமும் அவரது மனுவை தள்ளுபடி செய்ததுடன், நேரில் ஆஜராகி வாக்குமூலம் கொடுக்க வேண்டும். மேலும், பாதுகாப்பு விஷயங்களை மாநில அரசு கவனிக்கும் என்று கூறி, அரசு வழக்கறிஞருக்கு உதவும் வகையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவு பிறப்பித்தது.
நீதிமன்ற உத்தரவை ஏற்று ஜெயலலிதா இரண்டு நாள் மட்டும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதனிடையே மீண்டும் இரண்டு முறை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மீண்டும் இரண்டு நாள் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தார்.
இதன் காரணமாக என் மீது கோபம் அதிகரித்தது, ஜெயலலிதா தரப்பினரிடமிருந்து எனக்கு பல்வேறு எதிர்ப்புகள் மற்றும் மிரட்டல்கள் வந்தன. இதுதவிர அப்போது கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த பாஜக அரசிடமிருந்தும் அதிக நெருக்கடிகள் வந்தது. அதை பார்க்கும்போது ஆட்சியாளர்கள் சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவது தெள்ளத்தெளிவாக தெரிந்தது. இருப்பினும் தொடர்ந்து நான் வழக்கில் வாதாடி வந்தேன்.