நெருக்கடி கொடுத்து ராஜினாமா செய்ய வைத்த பாஜக - பி.வி. ஆச்சார்யா
இந்நிலையில் 6.8.2011ம் அன்று கர்நாடக மாநிலத்தின் அட்வகேட் ஜெனரலாக 5வது முறையாக நியமிக்கப்பட்டேன். இச்சமயத்தில் என்னை பழிவாங்கும் விதத்தில் நான் மோசடியில் ஈடுபட்டதாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரணை நடத்திய நீதிமன்றம், பொய்யாக வழக்கு தொடர்ந்திருப்பதை உறுதி செய்து, வழக்கு தொடர்ந்த நபருக்கு ரூ50 ஆயிரம் அபராதமும் விதித்தது. இந்த சமயத்தில் அட்வகேட் ஜெனரல் மற்றும் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆகிய இரு பொறுப்புகளில் ஏதாவது ஒன்றை ராஜினாமா செய்யுமாறு மாநில ஆளுநர் வலியுறுத்தினார்.
இதை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் பாஜக மேலிடம், மாநில அரசு மூலம் நான் வகிக்கும் இரு பதவிகளில், சொத்துக் குவிப்பு சிறப்பு அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்யுமாறு நெருக்கடி தந்தது. அதை ஏற்காத நான் 8-2-2012 அன்று அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்தேன்.
இருப்பினும் மாநில அரசு உள்ளிட்ட பல்வேறு தரப்புகளில் இருந்து தொடர்ந்து எனக்கு நெருக்கடிகள் வந்ததை தொடர்ந்து 13-8-2012 அன்று எனது ராஜினாமா கடித்தத்தை அரசுக்கு அனுப்பினேன். எனது ராஜினாமா முடிவினால் ஜெயலலிதா வழக்கில் பாஜக தலையீடு இருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது.
இதனால் எனது ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அரசு தரப்பில் கேட்கப்பட்டது. ஆனால், ராஜினாமாவை நான் திரும்பப்பெற விரும்பாததை தொடர்ந்து 17-1-2013 அன்று எனது ராஜினாமாவை அரசு ஏற்றது.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் நேர்மையாக வாதிட்டு வெற்றி பெற வேண்டும் என்று லட்சியத்துடன் இருந்தேன். குற்றவாளிகளும், அப்போது ஆட்சியில் இருந்தவர்களும் கொடுத்த தொல்லை காரணமாக என்னால் லட்சியத்தில் வெற்றி பெற முடியாமல் போனது.
இவ்வாறு தனது புத்தகத்தில் ஆச்சாரியா குறிப்பிட்டுள்ளார்.