மீண்டும் பச்சிளம் குழந்தை கடத்தல்.. 6 மணி நேரத்தில் மீட்பு.. 5 பேர் கைது
கோவையில் குழந்தை கடத்தப்பட்டு 6 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளது.
கோவை: தமிழகத்தில் குழந்தைகள் கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோவையில் மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை 6 மணி நேரத்தில் மீட்கப்பட்டு, கணவன் மனைவி உட்பட் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை சிங்கநல்லூர் வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜன். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். கர்ப்பவதியான இவருக்கு இடுப்பு வலி ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கடந்த 8ம் தேதி பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பிரசவத்திற்கு பின்னர் அவர் நார்மல் வார்ட்டிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
அந்த வார்ட்டில் இவர் இருந்த படுக்கைக்கு அருகில் அர்ச்சனா என்ற பெண்ணும் இருந்துள்ளார். அர்ச்சனா ஜோதியிடம் தன்னுடைய குழந்தை ஐசியூ வார்ட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சகஜமாக இருவரும் பேசி வந்த நிலையில் சம்பவத்தன்று பிற்பகல் 1 மணிக்கு மருத்துவரை பார்க்க ஜோதி செல்ல வேண்டி இருந்ததால் அர்ச்சனாவிடம் குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.
டாக்டரிடம் பேசிவிட்டு திரும்பி வந்த ஜோதிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. படுக்கையில் இருந்த குழந்தையை காணவில்லை. அருகில் இருந்த அர்ச்சனாவையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஜோதி மருத்துவமனை நிர்வாகத்திடமும் போலீசாரிடமும் புகார் கொடுத்தார்.
இதனையடுத்து, சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போலீசார், கால் டாக்சியில் குழந்தையுடன் ஒரு பெண் ஏறிச் சென்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கால் டாக்சி டிரைவரை அழைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது, கார் டிரைவர் குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணின் வீட்டை அடையாளம் காட்டியுள்ளார். அந்த வீட்டிற்கு சென்ற போலீசார் அங்குள்ளவர்களிடம் விசாரணையில் ஈடுப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து நரேஷ் அவரது மனைவி அரச்சனா, அவருடைய அம்மா பேபி, அப்பா ராமலிங்கம் உறவினர் கோமதி ஆகியோரை போலீசார் கைது செய்து, குழந்தையை மீட்டனர். காணமல் போன பச்சிளம் குழந்தையை 6 மணி நேரத்தில் பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.