விடிய விடிய கொட்டி தீர்த்த மழை... கண்மாய்கள் உடைப்பு- 6 பேர் பலி
சென்னை: தமிழகம் முழுவதும் இடியுடன் பெய்து வரும் கோடை மழைக்கு இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை மாவட்டம் திருமங்கலம், திருப்பரங்குன்றம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளநீர் ஊருக்குள் புகுந்துள்ளதால் குடியிருப்புவாசிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேலடுக்குச் சுழற்றி அதே இடத்தில் நீடிப்பதால் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கொட்டும் கனமழை
குமரிக்கடல் பகுதியில் உருவான மேலடுக்கு சுழற்சி, மேற்கு நோக்கி நகர்ந்து தற்போது, லட்சத் தீவு மற்றும் கேரள கடலோர பகுதியில் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையில் சாரல் மழை
சென்னை மற்றும் புறநகரில் நேற்று காலை முதல் மதியம் வரை விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் சென்னையில் வெப்பம் தணிந்து பொது மக்கள் நிம்மதி அடைந்தனர். பிற்பகலுக்கு மேல் வெயில் தலை காட்டியது.
விடிய விடிய மழை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய மழை கொட்டியது. இதில் அப்பகுதியில் இருந்த கண்மாய்கள் நிரம்பி வழிந்தன. திருமங்கலம் குண்டாற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதை ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.
கண்மாய் உடைப்பு
கொட்டித் தீர்த்த கன மழைக்கு சில இடங்களில் கண்மாய்கள் உடைந்தன. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தரைப்பாலமும் உடைந்தது. இதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாலத்தை சீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என உள்ளூர்வாசிகள் குற்றம்சாட்டினர்.
சிறுமி பலி
திருமங்கலத்தை அடுத்த கரடிக்கல்லில் வெள்ளநீரை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த இரண்டு வயது சிறுமி அடித்துச் செல்லப்பட்டார். சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்ட சிறுமியை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் சிறுமி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வீட்டிற்குள் விழுந்த இடி
திண்டிவனத்தில் இன்று காலையில் இடியும் மின்னலுமாய் பலத்த மழை கொட்டியது. கொங்கராம் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மனைவி கஸ்தூரி (51) மகள் சாந்த லட்சுமி(21) இருவரும் இன்று வயலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிவந்தனர். வீட்டிற்குள் நுழைந்த உடன் இடி தாக்கியதில் கஸ்தூரி சம்பவ இடத்திலேயே பலியானார்.
உடல் கருகி பலி
படுகாயமடைந்த சாந்தகுமாரி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக திண்டிவனம் வருவாய்த்துறையினரும், பெரியதச்சூர் போலீஸாரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விவசாயி மரணம்
அதே நேரத்தில் உளுந்தூர்பேட்டை அருகே மாரனோடை கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி என்பவர் மகன் பெர்த் ரெட்டியார் (60) இவர் இன்று தனது வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது இடிதாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை வருவாய்த்துறையினர் மற்றும் திருநாவலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கோடை மழைக்கு இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மழை நீடிக்கும்
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், ஒருசில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மைய இயக்குநர் ரமணன் தகவல் தெரிவித்துள்ளார். மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதாகவும் மேலும் லட்சத்தீவு கடற்பகுதிக்கும், கேரள கடற்பகுதுயிலும் மேலடுக்கு சுழற்சி நீடிப்பதாகவும் அவர் கூறினார். இன்று காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாக திருமங்கலத்தில் 14 செ.மீ மழையும், கள்ளிக்குடியில் 11 செ.மீ மழை பெய்துள்ளதாகவும் ரமணன் தெரிவித்துள்ளார்.