விவசாயக்கடன் வழங்க லஞ்சம் கேட்ட மேலாளர்... விவசாயியின் புகாரால் பணத்தோடு சிக்கினார்!
விவசாய கடனுக்கு லஞ்சம் வாங்கிய வங்கி மேலாளரை சிபி.ஐ காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்
Recommended Video

வேலூர்: விவசாய கடன் தருவதற்கு லஞ்சம் வாங்கிய வங்கி மேலாளரை சிபிஐ காவல்துறையினர் கையும் களவுமான கைது செய்துள்ளனர். ரூ. 4 லட்சம் கடனுக்கு ரூ. 40ஆயிரம் கேட்ட வங்கி அதிகாரி முன்பணம் வாங்கிய போது சிபிஐயிடம் வசமாக சிக்கினார்.
வேலூர்மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள அரங்கல்துர்கம் கிராமத்தில் பேங்க் ஆப் இந்தியா அரசு வங்கி உள்ளது. இந்த வங்கியின் மேலாளராக ராமநாதன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரிடம் பார்சனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி விவசாயி பார்த்திபன் விவசாயம் செய்வதற்காக விவசாய கடன் ரூ.4 லட்சம் தேவையென விண்ணப்பித்திருந்தார்.

ரூ.4 லட்சம் கடன் வழங்க வேண்டுமானால் தனக்கு ரூ.40 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தான் ரூ.4 லட்சம் கடன் வழங்க முடியும் என்று ராமநாதன் கூறியுள்ளார். இதனால் விவசாயி சென்னையில் உள்ள சிபி.ஐ காவல்துறையில் வங்கி மேலாளர் லஞ்சம் கேட்பதாக புகார் அளித்தார்.
இந்நிலையில் வங்கி மேலாளரிடம் முதற்கட்டமாக விவசாயி பார்த்திபன் ரூ.8 ஆயிரம் முதல் தவணையாக லஞ்சம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த சிபிஐ டிஎஸ்பி சோமய்யா மற்றும் ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் வங்கி மேலாளர் ராமநாதனை கையும் களவுமாக கைது செய்தனர்.
ராமநாதனின் ஆம்பூர் காமராஜர் 6 ஆவது தெருவில் உள்ள வீட்டிலும் சிபி.ஐ காவல்துறையினர் சோதனை செய்தனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணையும் நடைபெற்று வருகிறது. ஆம்பூர் அருகே சில நாட்களுக்கு முன்னர் லஞ்சம் வாங்கிய டிஎஸ்பி கைதான நிலையில் அதே பகுதியில் லஞ்சம் வாங்கிய வங்கி அதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications