ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களுக்கு 11 ஆண்டுகள் தடை விதிக்க அன்புமணி வலியுறுத்தல்

வாக்குச்சீட்டு முறைக்கு திரும்பவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களுக்கு 11 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் நிரந்தரமாகவோ, குறைந்தபட்சம் 11 ஆண்டுகளுக்கோ தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை:

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக வேட்பாளர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் அவர்கள் அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்திருக்கிறது. இதற்கு வசதியாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் செய்யுமாறு மத்திய அரசுக்கு பரிந்துரைக்கவும் ஆணையம் தீர்மானித்துள்ளது.

 banned for candidates, who paying money to vote, says anbumani ramadoss

ஆட்சியில் இருந்த காலத்தில் அதிகாரத்தை பயன்படுத்தி மக்களின் வரிப்பணத்தையும், இயற்கை வளங்களையும் கொள்ளையடித்து வைத்திருக்கும் கட்சிகள், அந்த பணத்தில் குறிப்பிட்ட அளவை வாரி இறைத்து வாக்குகளை விலைக்கு வாங்கி வெற்றி பெறுவது அதிகரித்து வரும் நிலையில், அதைத் தடுக்க தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவிருக்கும் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கதாகும்.

இதில் வேதனையளிக்கும் உண்மை என்னவென்றால் இப்படி ஒரு சீர்திருத்தத்தைக் கொண்டு வருவதற்கான சிந்தனையை தேர்தல் ஆணையத்திற்கு தூண்டியதே தமிழகம் என்பது தான். கடந்த மாதம் நடப்பதாக இருந்து ஒத்திவைக்கப்பட்ட இராதாகிருஷ்ணன் நகர் இடைத் தேர்தலில் எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்தும், நூதனமான வழிகளை பயன்படுத்தி ஓட்டுக்கு பணம் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தே இம்முடிவுக்கு ஆணையம் வந்திருக்கிறது. எத்தனையோ விஷயங்களில் முன்னோடியாக இருந்த தமிழகம் இப்படி ஓர் அவலத்திற்கும் முன்னுதாரணமாக அமைந்திருப்பது வருத்தமளிக்கிறது.

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் தான் வாக்காளர்கள் விலைக்கு வாங்கப்பட்டனர் என்று கூறமுடியாது. ஓட்டுக்கு விலை நிர்ணயித்து வாங்கும் கலாச்சாரம் 2005-ஆம் ஆண்டு காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தலிலேயே தொடங்கி விட்டது. அதன்பின்னர் திருமங்கலம், திருவரங்கம் என படிப்படியாக வளர்ச்சியடைந்த இந்தக் கலாச்சாரம் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் உச்சத்தை அடைந்தது.

இதற்கு முன் 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கூட அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுகவும், திமுகவும் போட்டிப்போட்டு ஓட்டுக்கு பணம் கொடுத்தன. அதிமுக ரூ.10000 கோடியும், திமுக ரூ.6000 கோடியும் செலவழித்து தான் இந்த வெற்றியைப் பெற்றன என்ற குற்றச்சாற்று இன்று வரை இரு கட்சிகளாலும் மறுக்கப்படவில்லை. குறிப்பாக தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் பெருமளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இரு தொகுதிகளிலும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதன்மூலம் முறைகேடுகளுக்காக பொதுத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட தொகுதிகள் என்ற அவப்பெயரை இரு தொகுதிகளும் பெற்றன. இதனால் தமிழகம் தலைகுனிந்தது.

தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்று நெடுங்காலமாகவே பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை இரு முறை டெல்லியில் சந்தித்த நான், ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் கட்சிகளை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும்படி வலியுறுத்தினேன்.

அதையேற்று மொத்தம் 47 வகையான தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஆணையம் முடிவு செய்திருப்பதாகவும், இதற்கான பரிந்துரைகள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் ஜைதி உறுதியளித்திருந்தார். அதன் தொடர்ச்சியாகவே தேர்தல் ஆணையம் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக நான் கருதுகிறேன்.

எனினும், நேர்மையான, சுதந்திரமான தேர்தலை உறுதி செய்ய இது மட்டும் போதாது. ஒட்டுக்கு பணம் கொடுத்த குற்றச்சாற்றுக்காக வேட்பாளரை 5 ஆண்டுகள் தகுதி நீக்கம் செய்தால் அதிகபட்சமாக ஒரு தேர்தலில் மட்டுமே அவரால் போட்டியிட முடியாது. அதன்பின் மீண்டும் இத்தகைய முறைகேடுகளில் ஈடுபடக்கூடும். எனவே, ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் நிரந்தரமாகவோ, குறைந்தபட்சம் 11 ஆண்டுகளுக்கோ தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்.

10 விழுக்காட்டுக்கும் அதிக தொகுதிகளில் ஒரு கட்சியின் வேட்பாளர்கள் ஓட்டுக்கு பணம் தந்ததாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால், அக்கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும். இதற்கான மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திருத்த முன்வடிவுகளை வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும்.

இதுதவிர ஓட்டுக்கு பணம் கொடுப்போருக்கு வழங்கப்படும் சிறை தண்டனையை ஓராண்டிலிருந்து 3 ஆண்டுகளாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில், அதற்காக இந்திய தண்டனைச் சட்டத்தில் செய்ய வேண்டிய திருத்தத்தையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இதற்கெல்லாம் மேலாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் மிகப்பெரிய அளவில் மோசடிகள் செய்யப்படுவதால், அதற்கு பதிலாக வாக்குச்சீட்டு முறைக்கு திரும்பவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+