பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது: ஆகஸ்ட் 4 வரை நடைபெறும்
சென்னை: பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு இன்று காலை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்கியது. இந்த கலந்தாய்வில் தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் கல்லூரி சேர்க்கை கடிதங்களை வழங்கினார்.
தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.
விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த ஜூன் 23, 24 ஆம் தேதிகளில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கு ஜூன் 25ஆம் தேதி நடைபெற்றது.
புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்க, ஏஐசிடிஇ எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு அவகாசம் கோரியதால், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டது.
ஆகஸ்ட் 4 வரை தொடக்கம்
இப்போது பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 7-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை 29 நாள்கள் நடத்தப்பட உள்ளது.
3000 பேருக்கு அழைப்பு
முதல் நாளான இன்று. பி.இ. கட்-ஆஃப் 200-க்கு 200 பெற்றவர்கள் முதல் குறைந்தபட்சம் 198.75 கட்-ஆஃப் பெற்றவர்கள் வரையில் 3 ஆயிரம் பேர் முதல் நாள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
9 சுற்றுக்கள்
கலந்தாய்வின் இரண்டாம் நாளிலிருந்து முதல் சுற்று காலை 7 மணிக்குத் தொடங்கப்படும். பின்னர் 8.30, 10.00, 11.30, 1.00, 2.30, 4.00, 5.30, 7.00 மணி என 9 சுற்றுகளாக கலந்தாய்வு நடத்தப்படும்.
2 மணிநேரம் முன்பாக
மாணவர்கள் அவர்களுடைய சுற்று தொடங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னதாக கலந்தாய்வு வளாகத்துக்கு வந்துவிட வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
இணையதளத்தில் தகவல்
கலந்தாய்வில் பங்கேற்போருக்கு எஸ்எம்எஸ் மூலம், தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அழைப்பு கடிதம் கிடைக்காத மாணவர்கள், www.annauni.edu என்ற இணையதளத்தில் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அதிகரிக்கப்பட்ட இடங்கள்
அகில இந்திய கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) 2014-15 கல்வியாண்டில் புதிதாக 7 பொறியியல் கல்லூரிகளைத் தொடங்க அனுமதி அளித்தது, ஏற்கெனவே நோட்டீஸ் அளிக்கப்பட்ட சில கல்லூரிகளில் நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதித்தது மற்றும் சில தனியார் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சிலவற்றை கலந்தாய்வுக்கு ஒப்படைத்தது என்பன உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் உள்ள மொத்த அரசு ஒதுக்கீட்டிலான பொறியியல் இடங்கள் 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது.