சிப்பியும் இருக்கிறது.. முத்தும் இருக்கிறது.. திறந்து பார்க்கும் ராஜாத்தி எங்கே?
ஸ்ரீதேவி நடிப்பில் வெளிவந்த சில தமிழ் பாடல்கள் மற்ற பாடல்களை விட தமிழில் அதிக வரவேற்பு பெற்றது.
Recommended Video
சென்னை: ஸ்ரீதேவி நடிப்பில் வெளிவந்த சில தமிழ் பாடல்கள் மற்ற பாடல்களை விட தமிழில் அதிக வரவேற்பு பெற்றது. இப்போது கேட்கும் போது கூட அந்த பாடல்கள் உள்ளுக்குள் ஏதோ செய்யும், ஒரு ஜில் என்று உணர்வு ஏற்படும்.
ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பினால் மரணமடைந்தார். 54 வயதாகும் ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள். அதே போல் சக நடிகர்கள், நடிகைகளும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மூன்று
அவர் தனது வாழ்நாளில் பல பாடல்களில் நடித்து இருந்தாலும் இந்த மூன்று பாடல்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. மூன்றிலும் ஸ்ரீதேவி நடித்துக் கொண்டே பாடுவது போல காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். முக்கியமாக அந்த பாடல்தான் படத்திற்கு பெரிய திருப்பமாக இருக்கும்.
வசந்த கால நதிகளிலே பாடல்
மூன்று முடிச்சு படத்தின் வசந்த கால நதிகளிலே பாடல், கருப்பு வெள்ளை, ரஜினி, கமல், ஸ்ரீதேவி, மவுத் ஆர்கன் இதைவிட ஒரு பாடலை அழகாக மாற்ற என்ன வேண்டும். கமலின் மவுத் ஆர்கன் சங்கீதமும், ஸ்ரீதேவி கணீர் சிரிப்பும் 80களின் அழகியல். ரஜினி பாத்திரத்தின் வில்லத்தனம் அம்பலம் ஆகும் போது, ஸ்ரீதேவி கொடுக்கும் முக மாற்றம் யாருக்கு மறக்கும்.
சின்னஞ்சிறு வயதில் பாடல்
80களில் ஸ்ரீதேவியின் வெகுளித்தனமான நடிப்பிற்கு மயங்கி கிடந்தவர்களுக்கு இந்த பாடல் மறக்க முடியாத ஒன்று. நீல புடவையில், வீணை வைத்துக் கொண்டு, அப்பாவித்தனமான முகத்தோடு ''சின்னஞ்சிறு வயதில் (மீண்டும் கோகிலா)'' என்று ஸ்ரீதேவி பாடும் போது உள்ளுக்குள் ஏதோ செய்யும். ''உள்ளத்தில் வைத்து இருந்தும் நான் ஒரு ஊமையை போலிருந்தேன்... ஊமையை போலிருந்தேன்'' என்று ஸ்ரீதேவி பாடி நிறுத்தவும், கமல் ''கள்ளத்தனம் என்னடி'' என பாடவும்.. அந்த ஒரு காட்சி இப்போதும் பலருக்கு நினைவிருக்கும்.
சிப்பியிருக்குது முத்தும் இருக்குது
ஸ்ரீதேவி சினிமா வாழ்க்கையில் வந்த சிறந்த பாடல் '' சிப்பியிருக்குது முத்தும் இருக்குது (வறுமையின் நிறம் சிவப்பு) '' என்று கூட சொல்லலாம். ''லலலாலா, தனனானா'' இது மட்டும்தான் அந்த பாடலில் ஸ்ரீதேவி சொல்வது. ஆனால் அதற்குள் எத்தனை, எத்தனை முக பாவங்கள். முக்கியமான அந்த 'விசில் சத்தம்'. அதன்பின்பும், அதற்கு முன்பும் அப்படி ஒரு பாடல் வந்தேதே இல்லை. இனி வரப்போவதும் இல்லை.
எங்கே
இந்த மூன்று பாடல்களுமே அவரது சமகால நடிகர்கள் ரஜினி, கமலுடன் நடித்தது. 16 வயதினிலே படத்தில் தொடங்கிய வசிகர கூட்டணி. அந்த சிப்பியும் இங்குதான் இருக்கிறது.. முத்தும் இங்குதான் இருக்கிறது... திறந்த பார்க்க வேண்டிய ராஜாத்தி விட்டு தூர சென்றுவிட்டார்.