பாமக, தேமுதிக கூட்டணிக்காக நடந்த தொகுதி பஞ்சாயத்து, சேர் தகராறு: மனம் திறந்த வானதி சீனிவாசன்!
சென்னை: லோக்சபா தேர்தல் கூட்டணியின் போது தொகுதிப் பிரச்சனை, நாற்காலி தகராறு என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பாஜக துணைத் தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் வெளிப்படையாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஆனந்த விகடன் வார ஏட்டுக்கு வானதி ஸ்ரீனிவாசன் அளித்த பேட்டி விவரம்:
கேள்வி: கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயம் மூன்றாவது அணி அமைக்கும்போது, எக்குத்தப்பான குழப்பங்கள், ஏகப்பட்ட களேபரங்கள்... அப்போ என்னதான் நடந்துச்சு?'
வானதி ஸ்ரீனிவாசன்: அச்சச்சோ... அதெல்லாம் ரகசியம்! வெளியே சொல்லலாமானு தெரியலையே. சரி... பரவாயில்லை. ரிஸ்க் எடுக்கிறேன்!
சஸ்பென்ஸ்லயே மூணு மாசங்கள்
எங்க கூட்டணிக்கு பா.ம.க வருமா... தே.மு.தி.க வருமாங்கிற சஸ்பென்ஸ்லயே மூணு மாசங்கள் ஓடிருச்சு. தேர்தல் நெருங்கிடுச்சு.
அப்ப கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சிகூட நான் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திட்டு இருந்தேன். அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன், நீங்க கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கிறதுக்குள்ள தேர்தலே முடிஞ்சிரும்னு கிண்டலா சொல்வார்.
வந்து டிபன் சாப்பிட்டுப் போயிட்டாங்க
அப்போ தே.மு.தி.க எங்க கூட்டணிக்கு வந்துடுச்சுனு பேட்டி குடுத்துட்டோம். ம.தி.மு.க எங்ககூட வந்து டிபன் சாப்பிட்டுப் போயிட்டாங்க. நாங்க பா.ம.க-கூட போய் காபி, ஸ்வீட் சாப்பிட்டாச்சு. பொண்ணு - மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பேசி முடிக்கிற மாதிரி ஒவ்வொரு சம்பிரதாயமா நடக்குது. இப்படிப் பேச்சுவார்த்தை நடத்திட்டே இருக்கும்போது, திடீர்னு தே.மு.தி.க வேட்பாளர்களை அறிவிச்சுட்டாங்க.
பா.ம.க முறுக்கிக்கிட்டாங்க
சேலம் தொகுதிக்கு சுதீஷ் வேட்பாளர். உடனே பா.ம.க முறுக்கிக்கிட்டாங்க. ஆனா, எங்களுக்கே அந்தத் தகவல்கள் எல்லாம் நியூஸ் பார்த்துதான் தெரியும். அதிர்ச்சியில் இருந்தோம்.
பா.ம.க., கொங்கு நாட்டு மக்கள் கட்சியோடு தொகுதிப் பேச்சுவார்த்தை இறுதி ஆகுறதுக்குள்ள தே.மு.தி.க எப்படி வேட்பாளர்களை அறிவிச்சாங்க?னு மேலிடத்தில் இருந்து பிரஷர்.
முறுக்கு, சீடை தான் ஆறுதல்
அந்தச் சமயம் பொன்னார் சார் அறையில்தான் உக்காந்திருப்போம். என்ன பண்றதுனு தெரியாது. டென்ஷனா இருக்கும். அங்கே முறுக்கு, சீடை பாக்கெட் இருக்கும். எல்லாரும் முறுக்கை எடுத்துச் சாப்பிட ஆரம்பிச்சிருவோம்.
இப்படி அடிக்கடி டென்ஷனாகி பல முறுக்கு பாக்கெட் காலி ஆகிருக்கு. தேர்தல் நெருங்கிருச்சு. தமிழகத்தில் இரண்டு திராவிடக் கட்சிகள் இல்லாத மூன்றாவது அணி அமைச்சுட்டோம்னு சொல்லி ராஜ்நாத் சிங்கை வரச் சொல்லிட்டோம். அவர் வர்றதுக்கு முந்தின நாள் இரவு 1 மணிக்கு பா.ஜ.க-வின் தமிழகப் பொறுப்பாளர் முரளிதர ராவ் என்னைக் கூப்பிட்டார்.
எனக்கே ஒண்ணும் புரியலைம்மா
எல்லாம் உறுதி ஆகிடுச்சா... ஹால் ரெடியா? நீங்கதான் இன்சார்ஜ். நிகழ்ச்சியை பக்காவா நடத்திருங்கனு சொன்னார். ஆனா, அப்ப வரைக்கும் மேடையில் வைக்கிற ஃப்ளெக்ஸ்ல யார் யார் படம் போடுறதுனு முடிவாகலை. அதைப் பத்தி பொன்னார் சார்கிட்டே கேட்டா, வெச்சார்பாருங்க ஒரு ட்விஸ்ட்... எனக்கே ஒண்ணும் புரியலைம்மா. நீயே பார்த்து பேலன்ஸா ஒரு பேனர் ரெடி பண்ணிடுனு சொல்லிட்டார். எனக்கு என்ன பண்றதுனே தெரியலை.
பேனர்கள் பல வகை...
நாளைக்குக் கூட்டத்துக்கு பா.ம.க வருவாங்களானு தெரியலை. கொங்கு மக்கள் தேசியக் கட்சி நம்ம கூட்டணியில் இருக்கானு யாருக்கும் தெரியலை. விஜயகாந்த், வைகோ, பாரிவேந்தர்... இவங்கதான் கன்ஃபர்ம்.
அதனால எல்லா கட்சிகளையும் சேர்த்து ஒரு பேனர் அடிச்சோம். அப்புறம் பா.ம.க-வை வெச்சுட்டு கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியை எடுத்துட்டு ஒரு பேனர். இன்னொண்ணுல கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி வெச்சுட்டு பா.ம.க-வைத் தூக்கிட்டு ஒரு பேனர்.
இப்படி விதவிதமான கூட்டணிகள் காம்பினேஷன்ல அஞ்சு பேனர்கள் அடிச்சோம். இதெல்லாம் நடந்தது நடுராத்திரி. விடியிறதுக்காகக் காத்திருந்தோம்.
கூட்டணியை விட்றாதீங்க, எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்...
விடிஞ்சிருச்சு. காலையில யார் யாருக்கு எத்தனை தொகுதினு அறிவிக்கணும். ஆனா, அப்போ வரை கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி முடிவு சொல்லலை. நான் வெறுத்துப்போய், கொங்கு நாடு இல்லாத பேனரை மேடையில ஒட்டுங்கப்பானு சொல்லிட்டேன். அந்தத் தகவல் பத்திரிகைக்காரங்க மூலமா பரவிருச்சு.
உடனே எனக்கு போன் வந்தது. ஏங்க கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி உங்க கூட்டணியில வேண்டாம்னு முடிவு பண்ணிட்டீங்களாமே! உங்க பேனர்ல கட்சி பேர் இல்லையே?னு விசாரிச்சாங்க. நான் உடனே ஈஸ்வரன்கிட்ட பேசினேன். 'உறுதியாக மோடி பிரதமர் ஆகிடுவார். இந்தக் கூட்டணியை விட்றாதீங்க. எதுவா இருந்தாலும் பேசிக்கலாம். மீட்டிங் வாங்கனு சொன்னேன். சரினு அப்போதான் சம்மதம் தெரிவிச்சார்.
அப்புறம்தான் எங்களுக்கு உயிரே வந்துச்சு
மீட்டிங்குக்குக் கொஞ்ச நேரம் முன்னாடி பா.ம.க-வும் வர்றோம்னு சொல்லிட்டாங்க. அப்புறம்தான் எங்களுக்கு உயிரே வந்துச்சு. எல்லா கட்சி சின்னங்களும் இருக்கிற பேனர் ஒட்டினோம். அப்புறம் ஸ்டேஜ்ல இருக்கிற சேர்களில் தலைவர்கள் பேர் ஒட்டணும். ஆனா, தொண்டர்களுக்கு நபர்களின் முக்கியத்துவம் தெரியாம ராமதாஸ், வைகோ பேர்களை கடைசியில ஒட்டிட்டாங்க.
எல்லா சேர்களையும் திருப்பி வெச்சுடோம்...
விஜயகாந்த் பேரை நடுவுல ஒட்டினாங்க. உடனே அதை பத்திரிகைக்காரங்க வேக வேகமா போட்டோ பிடிச்சுட்டாங்க. அதைப் பார்த்து யாராவது கோவிச்சுக்கப் போறாங்கனு எல்லா சேர்களையும் திருப்பிவெச்சுடோம்.
இப்படி தொகுதிப் பிரச்னை, பேனர் பஞ்சாயத்து, சேர் தகராறுனு ஒவ்வொரு நிமிஷமும் கலட்டாவா இருந்துச்சு என்று கூறியுள்ளார்.