சென்னை, பெசன்ட் நகர் தேவாலயப் பெருவிழா தொடக்கம்.. பக்தர்கள் கூட்டத்தால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு!
சென்னை: சென்னை பெசன்ட்நகர் வேளாங்கண்ணி கோயிலுக்கு பக்தர்கள் ஏராளமானோர் சென்னையில் நடைப்பயணம் மேற்கொண்டதால், பெசன்ட்நகர், அடையாறு மற்றும் மந்தைவெளி ஆகிய இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 44-வது ஆண்டுப் பெருவிழா இன்று (29-ம் தேதி) முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது. தொடக்க விழாவினையொட்டி திருப்பவனியாக வரும் 12 அடி நீளமுள்ள அன்னையின் திருவுருவம் தாங்கிய திருக்கொடியை திருத்தல வளாகத்தில் அமைந்து 75 அடி உயரமுள்ள கொடிக் கம்பத்தில் ஏற்றப்படுகிறது.

இந்த திருவிழாவின் நாட்களில் ஒவ்வொரு நாளும் காலையும், மாலையும் திருப்பலிகளும், மாலை 5.30 மணிக்கு திருப்பலியின் இறுதியில் தேர்பவனியும் நடைபெறும். இந்த திருவிழாவை முன்னிட்டு இன்று மற்றும் செப்டம்பர் 4, 7 ஆகிய தேதிகளில் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பாக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தொடக்க விழாவையொட்டி இன்று காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர். இதன் காரணமாக சென்னையில் பெசன்ட்நகர், அடையாறு மற்றும் மந்தைவெளி ஆகிய இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானதோடு, ஆங்காங்கே வாகனங்கள் தேங்கி நின்றன. பக்தர்களின் வசதிக்காக சில பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications