குவிந்த காளைகள்.. கால நீட்டிப்பு செய்யப்பட்டு நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல்வர் மற்றும் துணை முதல்வர் உற்சாகமாகத் தொடங்கி வைத்தனர்.
மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது. ஐந்து மணிக்கு போட்டிகள் நிறைவு பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
உலகப்புகழ் பெற்ற இந்த போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி வைத்தனர். முன்னதாக வாடிவாசலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜல்லிக்கட்டு உறுதிமொழியை வாசித்தார்.
அதில், "ஜல்லிக்கட்டை கொண்டாடிடவும், நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பேணி காப்போம் என்றும், விளையாட்டில் சீறி வரும் காளைகளுக்கும் எவ்வித ஊறும் செய்ய மாட்டோம் என்றும் இவ்விளையாட்டில் பங்கேற்கும் காளைகளுக்கும் வீரர்களுக்கும் சிறிதும் தீங்கு நேராமல் அரசு விதிமுறையை பின்பற்றி விளையாடுவோம் என்றும் உறுதி மொழிகிறோம்" என முதல்வர் வாசிக்க உடன் இருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காலை முதலே வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை இளைஞர்கள் துள்ளிக் குதித்து அடக்கினர். பங்குபெற்ற 1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு களம் இறக்கப்பட்டனர்.
சட்ட விதிகளுக்கு உட்பட்டு காளைகளின் திமிலை அடக்கி காளையர்கள் தங்க நாணயம், மோட்டார் சைக்கிள், சைக்கிள், பீரோ, சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுகளை அள்ளிச் சென்றனர். இதே போன்று வீரர்கள் அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் கிடைத்துள்ளன.
ஆயிரம் காளைகள் பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் 600க்கும் குறைவான காளைகளே களத்தில் இறக்கி விடப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டிக்கான நேரத்தை ஒரு மணி நேரம் அதிகரித்து மாலை 5 மணி வரை நீட்டித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தது.
விழாக்குழுவினர் விடுத்த கோரிக்கையை ஏற்று இந்த கால நீட்டிப்பானது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.ஒரே சுற்றில் அதிக காளைகளை பிடித்த அஜய் என்கிற மாடுபிடி வீரருக்கு முதல்வர் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.