வனப்பகுதியில் விபத்து.. தகவல் சொல்ல ஆளில்லாமல் ஆம்புலன்ஸ் செல்ல தாமதமான சோகம்
கிருஷ்ணகிரி: தனியார் பஸ்சும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் கிருஷ்ணகிரி அருகே இன்று மதியம் நடந்துள்ளது. இந்த கோர விபத்து குறித்து சாலையில் பைக்கில் சென்ற ஒருவர் தந்த தகவலை தொடர்ந்தே போலீசார் சம்பவ இடத்திற்கு வர முடிந்தது.
பெங்களூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை எண்-7ல், கிருஷ்ணகிரி மற்றும் ஒசூர் நகரங்களுக்கு நடுவேயுள்ள மேலுமலை என்ற பகுதியில் இன்று மதியம் சுமார் 3 மணிக்கு, கிருஷ்ணகிரி-ஒசூர் நடுவே இயக்கப்படும் தனியார் பஸ்சும், எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து நடந்தது.
பஸ்சின் பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த காரின் மீதும் லாரி மோதியது. இந்த சங்கிலி தொடர் விபத்தில் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்து நடைபெற்ற இடம், கிருஷ்ணகிரியிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் காட்டுப்பகுதியில் உள்ளது. இது மலைப்பாங்கான ஏரியாவாகும். எனவே விபத்து நடைபெற்ற உடனேயே அதுகுறித்து காவல்துறைக்கு யாராலும் தகவல் கொடுக்க முடியவில்லை.
பஸ், லாரி, காரில் பயணித்த அனைவருமே படுகாயமடைந்தனர் என்பதால் அவர்களாலும் ஆம்புலன்சையோ, போலீசையோ தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்நிலையில், அந்த வழியாக பைக்கில் சென்ற ஒரு நபர்தான், விபத்தில் சிக்கி பலரும் உயிருக்கு போராடுவதை பார்த்து, போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனால் சற்று தாமதமாகவே போலீசாரும், ஆம்புலன்சும் சம்பவ இடத்திற்கு வர முடிந்தது குறிப்பிடத்தக்கது.