ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: வேட்பாளரை அறிவித்தது பாஜக... சுப்ரமணியம் போட்டி
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக சுப்ரமணியம் போட்டியிடுவார் என அக்கட்சியின் மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். பாஜக வேட்பாளர் சுப்பிரமணியம் தமிழக பாஜக துணைத் தலைவராக தற்போது பதவி வகிக்கிறார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக பாஜகவை சேர்ந்த சுப்ரமணியம் போட்டியிடுவதாக தெரிவித்தார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், இந்திய ஜனநாயகக்கட்சியின் தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக்கட்சித்தலைவர் ஏ.சி சண்முகம், கொங்கு மக்கள் கட்சித்தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் ஆதரவுடனும், ஒப்புதலுடனும் பாஜக வேட்பாளர் சுப்ரமணியம் போட்டியிட உள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர், தற்போதைய அரசியல் சூழலில் திமுக, அதிமுக என்ற இரு கழகங்களுக்கு மாற்று சக்தியாக தமிழக மக்கள் பாஜகவை பார்க்கிறார்கள்.
தமிழ்நாட்டில் பாஜகவால்தான் வளர்ச்சியை கொடுக்க முடியும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். டாஸ்மாக் இல்லாத தமிழகத்தை பாஜக மட்டுமே வழங்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்பட்டுள்ளது என்றும் தமிழிசை கூறினார்.
இடைத் தேர்தலில் அதிகார பலம் பயன்படுத்தப்படாததை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். திருமங்கலம் உள்ளிட்ட பார்முலாக்கள் இல்லாமல் ஜனநாயகம் என்ற பார்முலா பின்பற்றப்பட வேண்டும். அப்போதுதான் நியாயமான தேர்தல் ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications