பாஜகவுக்கு இதை விட வேற என்ன பெரிய சங்கடம் வந்துரப் போகுது சொல்லுங்க!
சொந்த வேட்பாளரை விட்டு விட்டு தினகரனுக்கு வாக்களியுங்கள் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி செய்த பிரசாரம் பாஜகவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: தன் கட்சி வேட்பாளருக்கு பிரசாரம் செய்யாமல் அடுத்த கட்சியின் வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பிரசாரம் செய்துள்ளது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மறைந்ததை அடுத்து ஆர்கே நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டு பண விநியோகத்தால் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
தற்போது அதே தொகுதி மீண்டும் இடைதேர்தலை சந்திக்க உள்ளது. வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தினகரனுக்கு பிரசாரம்
பாஜக மூத்த தலைவர் தனது டுவிட்டர் பக்கத்தில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்துள்ளார். அதில் அவர் கூறுகையில், ஆர்கே நகர் இடைத்தேர்தல் நிலவரம் குறித்து அங்குள்ள பாஜக நிர்வாகிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். அங்கு திமுகவுக்கும், தினகரனுக்கும் போட்டி நிலவுகிறதாம். எனவே தமிழர்கள் டிடிவி தினகரனுக்கு வாக்களியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
சொந்த கட்சிக்காரர்கள் அதிருப்தி
தனது கட்சியைச் சேர்ந்த கரு நாகராஜனும் ஆர்கே நகரில் போட்டியிடும் நிலையில்
அவருக்கு ஆதரவு தெரிவிக்காமல், வேறு கட்சியை சேர்ந்த தினகரனுக்கு சுவாமி ஆதரவு தெரிவித்து வாக்கு கேட்டுள்ளது பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளது. சுப்பிரமணியன் சுவாமியின் செயல்பாட்டை இனியாவது பாஜக தலைமை கண்டிக்குமா என்ற தொண்டர்கள் கோபத்துடன் உள்ளனர்.
சுவாமி ஆதரவு
அதிமுக பிளவுப்பட்டபோதும், அதிமுக பொதுச் செயலாளர் தொடர்பான பிரச்சினை எழுந்தபோதும் சசிகலாவுக்கு ஆதரவாகவே சுப்பிரமணியன் சுவாமி குரல் எழுப்பினார். இரட்டை இலையை முடக்கியது தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்த தவறு என்றெல்லாம் பேசினார்.
பக்கத்து கடை டீ...
வழக்கறிஞர் என்ற முறையில் மற்ற கட்சிகளின் பிரச்சினை குறித்து அவ்வபோது சர்ச்சைக்குரிய கருத்துகளையே கூறி வந்த நிலையில் தேர்தலிலும் அடுத்த கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக உள்ளாரே என்று பாஜக நிர்வாகிகள் வருத்தத்தில் உள்ளனராம். சொந்த கட்சிக்கு பிரசாரம் செய்யாவிட்டாலும் அடுத்த கட்சியினருக்கு பிரசாரம் செய்யாமல் இருந்தால் கட்சிக்கு ஏற்படும் சங்கடமாவது தீரும் என்கிறார்கள். சாமி! நீங்க போட்ட டுவீட் எப்படி இருக்கு தெரியுமா?, தனது கடை டீ நல்லாயிருக்காதுனு பக்கத்து கடையில் டீ குடிக்கும் காமெடி போல் உள்ளது!!.