கொடுத்தது ரூ.20.. கிடைக்கப் போவது ரூ.6000.. "குக்கர் கம்பெனி"யின் குயுக்தியான பட்டுவாடா!!
ரூ.20 நோட்டின் சீரியல் எண்ணை தெரிவித்தால் "குக்கர் கம்பெனி" ரூ.6000 கொடுக்கிறது என்று பாஜக வேட்பாளர் கரு நாகராஜன் புகார் தெரிவித்தார்.
Recommended Video
சென்னை: ஆர்கே நகரில் ரூ.20 நோட்டின் சீரியல் எண்ணை தெரிவித்தால் "குக்கர் கம்பெனிகாரன்" ரூ. 6000 கொடுக்கிறான் என்று பாஜக வேட்பாளர் கரு நாகராஜன் கடுமையாக புகார் கூறியுள்ளார்.
ஆர்கே நகரில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு தொடர்ந்து நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகவுள்ளது.
இந்நிலையில் பாஜக வேட்பாளர் கரு நாகராஜன் தினகரன் மீது பகீர் புகாரை கூறியுள்ளார். அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது இன்று புதிய தகவல் கிடைத்துள்ளது. அது என்னவெனில் ரூ.20 நோட்டை வாக்காளர்களுக்கு கொடுக்கிறார்கள்.
இப்படிக் கொடுக்கப்பட்ட ரூ.20 நோட்டின் சீரியல் எண்ணை சரியாகச் சொன்னால், ஒரு நோட்டுக்கு ரூ.6000 வழங்குவார்கள். இதை குக்கர் கம்பெனிகாரர்கள் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். இவங்க எல்லாம் கம்பெனி தானே நடத்துறாங்க... கட்சி கிடையாது.
எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் சம்பாதிக்கலாம் என்று கம்பெனி நடத்துறாங்க. குக்கர் கம்பெனி தற்போது ரூ. 20 நோட்டை கொடுத்துள்ளார்கள். இந்த நோட்டின் வரிசை எண்ணை சொன்னால் 4 வாக்காளர்கள் இருந்தால் அவர்களுக்கு ரூ.24,000 வழங்கப்படும் என்று ஆசை வார்த்தை கூறப்படுகிறது.
கடைசி நேரத்தில் மக்களின் மனதை மாற்ற முயற்சிக்கின்றனர். இது மோசடியாகவும் இருக்கலாம். யாருக்கு தெரியும். மக்களும் வோட்டு போட்டால் பணம் தருவார்கள் என்று நினைத்து போடலாம். இவர்கள் ஜெயித்தாலும் கொடுக்க பணம் இருக்கிறது. தோற்றுவிட்டால் எனக்கு நீங்கள் ஓட்டு போடவில்லை என்று ஏமாற்றிவிடுவர்.
மக்களை ஏமாற்றும் செயலை இவர்கள் தெளிவாக செய்கிறார்கள் என்றார் கரு நாகராஜன். தினகரனை குக்கர் கம்பெனிகாரன் என்றே விமர்சித்துள்ளார் பாஜக வேட்பாளர். மேலும் ஹவாலா முறையில் பணம் விநியோகம் செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.