ஓ காட்.. ஆர்.கே நகரில் ஓட்டுக்கு கொடுத்த 6000 ரூபாயை கோவில் உண்டியலில் போட்டார்களா வாக்காளர்கள்?
ஆர்.கே நகரில் ஓட்டுக்கான பணத்தை பலர் கோவில் உண்டியலில் போட்டுள்ளார்கள் என்று பா.ஜ.க வேட்பாளர் தெரிவித்து உள்ளார்.
Recommended Video
சென்னை : ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தங்களுக்கு சாதகமாக வாக்களிக்க சொல்லி கொடுக்கப்பட்ட பணத்தை வாக்காளர்கள் பலர் கோவில் உண்டியலில் போட்டுள்ளதாக பா.ஜ.க வேட்பாளர் கரு.நாகராஜன் தெரிவித்து உள்ளார்.
ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடந்து வருகிறது. மக்களும் காலை முதலே ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். 256 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து வருவதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில், ஆர்.கே நகர் வாக்குச்சாவடியில் இன்று காலை தனது வாக்கைப் பதிவு செய்த, பா.ஜ.க வேட்பாளர் கரு.நாகராஜன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது தேர்தல் நாளன்றும் கூட ஆர்.கே நகரில் டி.டி.வி தினகரன் தரப்பினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி உள்ளார்.
மேலும், ஓட்டு போட்டு விட்டு வந்து ஏற்கனவே விநியோகித்த 20 ரூபாய் நோட்டின் வரிசை எண்ணை சொன்னால், 6000 ரூபாய் பணம் கொடுப்பதாக சொல்லி வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட 20 ரூபாய் நோட்டையும் ஆதாரமாக பத்திரிகையாளர்களிடம் காட்டினார்.
இந்த நோட்டு உங்களுக்கு எப்படி கிடைத்தது என்கிற கேள்விக்கு, சம்பந்தப்பட்ட வாக்காளர்களே தன்னை நேரில் சந்தித்து இந்த விஷயத்தை சொல்லி வருத்தப்பட்டதாகவும், அப்போது தன்னிடம் இந்த நோட்டை கொடுத்ததாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
மேலும், எல்லா வாக்காளர்களும் பணத்தை வாங்கவில்லை என்றும், ஏற்கனவே வாங்கிய பணத்தை பலர் ஆர்.கே.நகரில் உள்ள கோவில் உண்டியல்களில் போட்டு உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.