இலங்கை விவகாரத்தில் காங்கிரஸை அப்படியே பின்பற்றும் பாரதிய ஜனதா...
சென்னை: இலங்கை விவகாரத்தில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்னமாதிரியான கொள்கைகளை கடைபிடித்ததோ அதை அப்படியே பின்பற்றத் தொடங்கியுள்ளது பாரதிய ஜனதா.
முந்தைய மத்திய அரசு இலங்கையை தமது மதிப்புக்குரிய நேச சக்தியாக நட்பு நாடாக பார்த்தது. இந்திய நாட்டு மீனவர்கள் 700 பேர் படுகொலை செய்யப்பட்ட நிலையிலும் கூட ஒரு கண்டனத்தைக் கூட முந்தைய காங்கிரஸ் அரசு தெரிவிக்கவில்லை.
இந்தியாவின் ஒரு மாநிலமாக இருக்கிற தமிழகத்தின் தொப்புள்கொடி உறவுகள் வாழும் இலங்கையின் வடபகுதியில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போது அதைத் தடுக்க மறுத்ததுடன் இனப்படுகொலைக்கே துணை நின்றது முந்தைய மத்திய அரசு.

சொத்தை காரணங்கள்
இலங்கையிடம் இத்தனை பரிவு ஏன் என்ற கேள்விக்கு "இந்திய துணை கண்டத்து புவிசார் அரசியல்" "காலங்காலமாக கடைபிடித்து வரும் வெளியுறவுக் கொள்கை" என்றெல்லாம் காங்கிரஸ் பேரியக்கம் சப்பைக் கட்டிக் கட்டியது. இந்த சப்பைக் கட்டுகளுக்கு தமிழகம் சம்மட்டி அடி கொடுத்து லோக்சபா தேர்தலில் சவக்குழிக்கே அனுப்பி வைத்தது.

பாதுகாவலன் பாஜக
காங்கிரஸை சவக்குழிக்கு அனுப்பி வைத்த போது தமிழர் உரிமை பிரச்சனைகளில் ஈழத் தமிழர் பிரச்சனைகளில் நாங்கள் பாதுகாவலராக இருப்போம் என்று ரட்சகரகர்களைப் போல பேசியது பாரதிய ஜனதா. தமிழக மக்களுக்கு பாரதிய ஜனதா மீது நம்பிக்கை வரும் வகையில் காலங்காலமாக ஈழத் தமிழர் துயர் தீர்க்க போராடி வரும் வைகோ போன்றவர்கள் பிரசாரம் செய்தார்.

மகிழ்ச்சி கூத்தில் இலங்கை
காங்கிரஸ் போய் பாஜக ஆட்சிக்கு வந்தது.. பாஜக வெற்றி பெற்றத் தொடங்கியபோதே இலங்கையில் மகிழ்ச்சிக் கூத்துகள் உச்சத்தை எட்டின.. பாஜகவின் மோடிக்கு வெற்றிக்கு முதல் வாழ்த்து மகிந்த ராஜபக்சேவிடம் இருந்து வருகிறது..

டெல்லிக்கு ராஜபக்சே
இப்போது உச்சமாக ராஜபக்சேவையே டெல்லி பதவியேற்பு விழாவுக்கு அழைக்கிறது பாஜக அரசு. கேட்டால் அன்று காங்கிரஸ் சொன்ன அதே பழைய வேதாந்தமான "காலம்காலமாக கடைபிடிக்கும் வெளியுறவு கொள்கை" "இந்தியாவின் புவிசார் அரசியல் நலன்" "அண்டை நாடுகளுடனான நல்லுறவு" போன்ற வியாக்கியானங்களைத்தான் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

உ.பி., ம.பிக்காக
பாரதிய ஜனதாவைப் பொறுத்தவரையில் அது ஹிந்தி பெல்ட் மக்களின் ஏகோபித்த வாக்குகளைப் பெற்ற கட்சி. அதாவது உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில்.. ஏகோபித்த ஆதரவு பெற்ற கட்சி.. இந்த மாநிலங்கள்தான் சிங்களவர் மூதாதையர் உலாவிய பூமியாக சிலாகித்துக் கொள்கிறார்கள்..

சிங்களவர் தாய்வீடு
அதனால்தான் ம.பி.க்கும் உ.பி.க்கும் சிங்களவர்கள் தாய்வீட்டுக்கு வந்து போவதைப் போல சகஜமாக வருகிறார்கள்.. ராஜபக்சேவுக்கு செங்கம்பள வரவேற்பு தருகிறார்கள்.. அப்படிப்பட்டவர்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற பாரதிய ஜனதா அரசு ராஜபக்சேவுக்கு செங்கம்பளம் விரிக்கத்தான் செய்யும்.. இதை தமிழகம் வேதனையோடும் வெறுப்போடும் பார்க்கத்தான் வேண்டும் என்பது விதியாகிப் போனது.

அன்று காங்கிரஸ், இன்று பாஜக.
அன்று காங்கிரஸ் ஏதோ ஏதோ காரணங்களுக்காக இலங்கைத் தமிழர்கள் படுகொலையை அரங்கேற்றியது.. போர்க்குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு கொடுத்தது..
இன்று பாரதிய ஜனதாவும் ஏதோ ஏதோ காரணங்களுக்காக அதே போர்க்குற்றவாளிகளுக்கு பதாகை விரித்து வரவேற்பு கொடுக்கிறது.. அதாவது இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதை வரலாற்றில் பதிவு செய்து கொண்டிருக்கின்றன.. அதற்கு வரலாறும் தக்க பதிலடி கொடுத்திருக்கிறது என்பதை அரசியல் நிகழ்வுகள் நிரூபித்திருக்கின்றன என்பதே யதார்த்தம்.












Click it and Unblock the Notifications