பாஜக அணியில் தேமுதிக- பாமக இணையுமா? நாளை முடிவு அறிவிப்பு- பொன். ராதாகிருஷ்ணன்
சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக மற்றும் பாமக இணையுமா என்பது பற்றிய முடிவு நாளை அறிவிக்கப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதிமுக, புதிய நீதிக் கட்சி, கொங்கு நடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை இதுவரை இணைந்துள்ளன. தேமுதிக மற்றும் பாமகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது பாஜக.
ஆனால் இந்த இரு கட்சிகளும் எந்த ஒரு முடிவையும் அறிவிக்காமல் இருக்கின்றன. இந்நிலையில் வரும் 8-ந் தேதி சென்னை வண்டலூரில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பொதுக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

நாளைக்குள் முடிவு- பொன். ராதா
அதற்கு முன்னதாக கூட்டணியை இறுதி செய்ய வேண்டும் என்பது பாஜகவின் விருப்பம். இது தொடர்பாக சென்னையில் தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாரதிய ஜனதா கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. புதிய கட்சிகள் இணைவதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெற்று வருகிறது.
பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாளை மறுநாள் சென்னை வருகிறார். அவர் பங்கேற்கும் கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்பர். ஆனால் அதுவே இறுதியாக இருக்காது.
அதன் பிறகும் எங்கள் கூட்டணியில் வேறு சில கட்சிகள் வந்து சேரலாம். தற்போதைய பேச்சுவார்த்தையின்போது நாங்கள் தொகுதிப் பங்கீடு பற்றி பேசவில்லை. கூட்டணி பற்றி மட்டும்தான் பேசிக் கொண்டிருக்கிறோம்.
கூட்டணி இறுதியான பின்னரே தொகுதி பங்கீடு பற்றி பேசுவோம். நாளைக்குள் எங்கள் கூட்டணி பற்றி நல்ல முடிவு தெரியும். பா.ம.க. கூட்டணியில் சேர வாய்ப்பு இல்லை என்று அக் கட்சி தலைவர் ஜி.கே.மணி கூறவில்லை.
சென்னையில் நடைபெறும் மோடி பொதுக்கூட்டத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்பது பற்றி இன்னமும் முடிவு செய்யவில்லை.
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.












Click it and Unblock the Notifications