தேமுதிகவுக்கு 12 அல்லது 14 தொகுதிகள்.. பாஜகவின் பைனல் பேரம்
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான கூட்டணியை ஓரிருநாட்களில் எப்படியும் இறுதி செய்துவிடுவது என்பதில் பாரதிய ஜனதா கட்சி மும்முரமாக இருந்து வருகிறது. பாஜக கூட்டணியில் பாமக இடம்பெற்றால் 12 தொகுதிகளும் இடம்பெறவில்லையெனில் 14 தொகுதிகளும் ஒதுக்குகிறோம் என்று தேமுதிகவுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் மதிமுக மற்றும் சிறுகட்சிகள் சில இடம்பெற்றுள்ளன. தேமுதிகவுடன் கடந்த 3 மாத காலமாக விடா முயற்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது பாஜக.
பாரதிய ஜனதா அணியில் இடம்பெற வேண்டுமெனில் 19 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று முதலில் பேச ஆரம்பித்தது தேமுதிக. அப்படியானால் பாமக, மதிமுகவுக்கும் தொகுதிகளை ஒதுக்கி பாஜகவும் போட்டியிடுவது சிக்கல் என்று தெரிவிக்கப்பட்டுவிட்டது.
தொடர்ந்து பாஜகவுடன் பேச்சுவார்த்தை
இதைத் தொடர்ந்து பாரதிய ஜனதாவுடன் பேசிக் கொண்டே காங்கிரஸ், திமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால் திமுக, காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைய வாய்ப்பில்லை என்று தெரிந்து கொண்ட தேமுதிக தரப்பு மீண்டும் பாஜகவுடன் பேச்சுகளை நடத்தியது.
19-ல் இருந்து இறங்கி 16
அப்போது 19 தொகுதிகளைக் கேட்ட நாங்கள் இப்போது 16-க்கு இறங்கி வருகிறோம். பாமக, மதிமுகவுக்கு எத்தனை சீட் வேண்டுமானாலும் ஒதுக்குங்கள் அது எங்கள் பிரச்சனை இல்லை என்று கூறிவிட்டதாம் தேமுதிக. அதே நேரத்தில் பாமக அறிவித்திருக்கும் 10 தொகுதிகளில் பலவற்றை தேமுதிகவும் கேட்டு இருக்கிறது.
12 அல்லது 14 தொகுதிகள்
அத்துடன் பாமகவின் சில தொகுதிகளையும் பாஜகவும் கேட்பதால் அந்த கட்சி கூட்டணிக்கே வருமா என்ற கேள்வி எழுந்தது. இதனால் பாமக வந்தால் தேமுதிகவுக்கு 12, வரவில்லை எனில் 14 தொகுதிகளை ஒதுக்குகிறோம் என்று உறுதியளித்துள்ளனராம்.
ப்ளஸ் ராஜ்யசபா சீட்டும் தருகிறோம்
அப்போதும் இறங்கிவராத தேமுதிக, பாமக வரவில்லையெனில் 16 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று பிடிவாதம் காட்டியிருக்கிறது. இதனால் பாஜக அணியில் தேமுதிகவுக்கு 12 முதல் 16 தொகுதிகளில் ஒன்று உறுதியாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அத்துடன் ராஜ்யசபா சீட்டுகளும் பாஜக தரப்பில் தருவதாக உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.
மதிமுகவுக்கு கூடுதல் தொகுதி?
மேலும் பாமக வராத நிலையில் 9 தொகுதிகளைக் கேட்கும் மதிமுகவுக்கு கூடுதலாக ஒரு தொகுதி ஒதுக்கவும் வாய்ப்பிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. தற்போது சிங்கப்பூரில் இருந்து திரும்பியிருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பாஜக அணிதான்..
அத்துடன் கூட்டணிக் கதவை சாத்திவிட்டு திமுக, இருக்கும் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்தி வருவதால் பாஜக அணியில் இணைந்து விடுவது என்பதில் தேமுதிக தீர்மானமாக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இதனாலேயே வரும் சனிக்கிழமை வரை காத்திருக்குமாறும் பாஜகவிடம் தேமுதிக கூறியுள்ளது.