இரட்டை சின்னத்தை பறித்தவர்களுக்கே ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு... திண்டுக்கல் லியோனி அட்டாக்
இரட்டை இலையை பறித்த கட்சிக்கே ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க. ஆதரவு அளித்துள்ளது என்று திண்டுக்கல் லியோனி கூறியுள்ளார்.
நம்பியூர்: இரட்டை இலையை பறித்த கட்சிக்கே ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க. ஆதரவு அளித்துள்ளது என்று திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி ஈரோட்டில் கூறியுள்ளார். இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் பஸ் நிலையத்தில் தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திண்டுக்கல் ஐ.லியோனி பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், கடந்த, 2011-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு 11 முறை டி.விகளிலும், செய்திதாள்களிலும் செங்கோட்டையன் அமைச்சர் ஆவார் என கூறினர். ஆனால் அவர் இப்போது சசிகலாவின் அடிமையாகி காலில் விழுந்த பிறகுதான் அமைச்சர் ஆகியுள்ளார்.
அனாதையான ஜெ. சொத்துக்கள்
தன் கட்சியின் தலைவியின் படத்தை கூட ரகசியமாக தான் போட வேண்டி உள்ளது. சசிகலாவின் படத்தை யார் எங்கு பார்த்தாலும் கிழித்து எறிகின்றனர். ஜெயலலிதா பல சொத்துகள் சம்பாதித்தார். ஆனால் அதெல்லாம் அனாதையாக கிடக்கின்றன.
மருத்துவமனையான கோபாலபுரம் வீடு
கலைஞர் தான் குடியிருந்த வீட்டை கூட மருத்துவமனைக்காக எழுதி கொடுத்துள்ளார். குளித்தலையில் தொடங்கி திருவாரூர் வரை 13 முறை தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக சிறந்த தலைவராக உள்ளார்.
13 முறை தொடர் வெற்றி
ஒரே சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடியவர் கலைஞர். தேசிய கட்சிகளுக்கு கூட சின்னங்கள் மாறியுள்ளன. ஆனால் ஒரே சின்னத்தில், உதயசூரியன் சின்னத்தில், கலைஞர் வெற்றி பெற்றுள்ளார். யாரும் படைக்காத சாதனை.
சின்னத்தை பறித்தவருக்கே ஆதரவு
தங்களின் கட்சி சின்னத்தையே பறித்த கட்சிக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு கொடுத்துள்ளது அதிமுக. தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவின் பினாமியாக உள்ளார். வரும் காலத்தில் தி.மு.க.விற்கு ஆதரவு கொடுத்து தி.மு.க. ஆட்சி அமைய அனைவரும் பாடுபட வேண்டும்." என்று தெரிவித்தார்.